
நாம் உருவாக்கும் (படைக்கும்) சக்தி பெற்றவர்கள்… மற்றொன்றுக்கு இரையாகி விடக்கூடாது
1.கோள்கள் உமிழ்த்தக் கூடிய சத்துக்கள் மற்றொன்றுக்கு இரையாகத் தான் அமையும்
2.நட்சத்திரங்கள் தனக்குள் படைத்தது மற்றொன்றுக்கு இரையாகி அந்த உணர்வுடன் இயங்க முடியும்.
3.ஆனால் சூரியனோ மற்றதை இணைத்து மற்றதை உருவாக்கும் செயல் பெற்றது.
இதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனைப் போன்று எண்ணத்தால் தெரிந்து… உணர்ந்து… அறிந்து செயல்படும் சக்தியாக உணர்வின் எண்ணங்களைப் பெற்றவன் தான் மனிதன்.
அப்படிப்பட்ட நிலையாக ஒளியின் சுடராக மாற்றி முழுமை பெற்றவர்கள் தான் மகரிஷிகள். “அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்திட வேண்டும்…” என்பதற்குத் தான் இதைப் பிரித்துப் பிரித்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு).
நம் உடலுக்குள் பகைமையற்ற நிலைகளும் பகைமையான உணர்வு நமக்குள் பதிந்திருந்தாலும் அந்தப் பகைமையை அகற்றிடும் நிலையை உருவாக்குதல் வேண்டும்.
“மிளகாயை…” வாயில் வைத்தால் அதை நாம் வெறுக்கின்றோம். ஆனால் அதைக் குழம்புடன் சேர்த்துச் சமப்படுத்தும் பொழுது சுவையைக் கூட்டும் நிலையாக வருகின்றது… மகிழ்ச்சியூட்டும் செயலும் வருகின்றது.
ஆனால் தனித்து உட்கொண்டால் வெறுக்கும் நிலையும் நம் உடல் உறுப்புகளில் வேதனை உருவாகும் நிலையும் உருவாக்குகின்றது பல பொருட்களுடன் இணைத்துச் சமப்படுத்தும் பொழுது சுவைமிக்கதாகி நமக்கு மகிழ்ச்சி தருகின்றது.
இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்து உருவாக்கி
2.சூரியன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதோ அதே போன்று
3.உடலான இந்த உலகிற்குள் தீமைகள் வராதபடி நாம் அருள் ஞானிகள் உணர்வைப் படைத்துப் பொங்கச் செய்ய வேண்டும்.
அதை உருவாக்க வேண்டுமென்றால்
1.முதலிலே தன் குடும்பம்
2.பின் தன் பந்துக்கள்
3.தன் தெரு தன் ஊர் இந்த உலகம் என்று
4.எல்லோரும் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை நாம் வளர்த்தோம் என்றால்
5.நமக்குள் படைத்த உயர்ந்த உணர்வலைகள் வெளிப்படும்போது
6.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அனைவருக்குள்ளும் பொங்கச் செய்து மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக மலரும்.
இன்றைய நிலையில் சில விஷத்தன்மைகளை (பூச்சிகளை… கிருமிகளைக் கொல்லும் மருந்துகள்) உருவாக்கி விஞ்ஞான அறிவால் மக்களைக் காக்க இன்று பரவச் செய்தாலும் அதிலே பல பொருள்களை இணைக்கும் பொழுது அதில் சில நஞ்சின் தன்மை வெளிப்படுகின்றது.
அந்த நஞ்சினை சூரியன் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரப்படும்போது அதை நுகர்ந்தோருக்கு நோயாகவும் தீமைகளும் உருவாக்கிவிடும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலைகள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வலைகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து நமக்குள் அதைப் படைத்து
2.நம் ஆன்மாவிலும் இந்தக் காற்று மண்டலத்திலும் பரவச் செய்ய வேண்டும்.
3.அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும் நோய்களை அகற்றிடும் சக்தியாகவும் உருவாக்கச் செய்யும்.
இது ஞானிகள் நமக்கு சாஸ்திரங்கள் மூலம் உணர்த்திய பேருண்மைகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.