“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்

“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்

 

இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.

எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.

ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.

அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.

இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்துதான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.

அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.

இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.

காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.

ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.

இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.

ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!

அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.

அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.அஷ்டமா சித்து என்பதின் மூன்றாம் சித்து.

முருகா…! என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் “அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது…” என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.

1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.

அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.

நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.

1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞான தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே..!

Leave a Reply