உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை விண் செலுத்தும் பழக்கம் வளர்ந்து விட்டால் “உந்துவிசை இல்லாமல் நாம் விண் செல்ல முடியும்…!”

 

தெளிந்த மனமும் தெளிந்திட்ட உணர்வும் கொண்டு…
1ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வினைத் தான்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

இந்த உபதேசத்தைப் படிக்கும் போதும் அல்லது கேட்கும் போதும் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற அருள் ஞான வித்தாக ஊன்றச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிட முடியும். ஏனென்றால் அருள் ஒளிச் சுடராக உங்கள் உணர்வுகளை வளர்த்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலைக்குத் தான் இந்த உபதேசமே…!

அருள் ஞானியின் உணர்வுகளை வலுப் பெறச் செய்து அதன் துணை கொண்டு ஏங்கித் தியானித்து… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்த உணர்வின் வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு தேரை இழுக்க வேண்டும் என்றால் அது கடினமானது. பலரும் சேர்ந்து அந்தத் தேரை இழுத்தால் தான் அது எல்லைக்கு வரும்.

அதைப் போன்று தான்…
1.பலரும் நாம் ஒன்று கூடி மனிதனின் கடைசி எல்லையான
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் கூடி நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டல எல்லையை அடையச் செய்தல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்த பின்… அறிவின் தெளிவாக நம்முடன் வாழ்ந்த அந்த உணர்வின் ஒளியாக நிலைபெறச் செய்வதே… “நம் குருநாதர் காட்டிய உயிரான்மாக்களை விண் செலுத்தும் முறை…”

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளோர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களை மேலே சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலை வரும் பொழுது அவருடைய எண்ணங்களும் அவர்களுடன் தொடர் கொள்கின்றது.

அதே சமயம் முன்னோர்கள் சப்தரிஷிகள் ஆன பின் அந்த மண்டலத்துடன் இணைந்த பின் “எண்ணும் பொழுதெல்லாம்” அங்கிருந்து எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடிகின்றது.

அதன் மூலம்…
1.வாழ்க்கையில் வரும் சலிப்போ சங்கடமோ வெறுப்போ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை அகற்றவும்
2.அறியாது உட்புகுந்து செயலாக்கும் தீமைகளை அகற்றவும்
3.தொழிலின் நிமித்தம் வரும் குறைகளை அகற்றவும்
4.சந்தர்ப்பத்தால் நம்மைப் பலவீனமடையச் செய்யும் இருளை அகற்றவும்
5.அந்த மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர நுகர… உங்கள் எண்ணங்கள் வலு பெற்று மன பலம் பெறுவீர்கள். உங்கள் தொழிலும் முன்னேற்றம் அடையும். அருள் ஒளியின் உணர்வாகக் கார்த்திகேயா என்று அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியும் பெறத் தகுதி பெறுகின்றீர்கள்.

முன்னோர்கள் முன் செல்ல அவர்களின் உணர்வை நமக்குள் பின்பற்ற இங்கே அவ்வப்போது வரும் இருளை அகற்றி உணர்வின் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
1.இதன் வழியில் தொடர்ந்து சென்றோம் என்றால்…
2.நாம் விண் செல்ல உந்து விசை தேவையில்லை.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணவின் தன்மை வலுவாக்கிக் கொண்டால்
1.கடைசி எண்ணம் நமக்குள் அது தான் வரும்…
2.சப்தரிஷி மண்டலத்தை நாம் எளிதில் அடைய முடியும்.

ஆனால் முந்தி வாழ்ந்தவர்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அந்த வலுவும் இல்லை.

இன்று உடலுடன் இருக்கும் நாம் நமக்குள் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுப் பெறச் செய்து அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்தித் தள்ளினால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியின் உணர்வாக வளர்ச்சியாகி சப்தரிஷி மண்டலங்களின் உருவாக ஆகிவிடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் அறியாது சேரும் குறைகளையும் நோய்களையும் சலிப்பையும் நாம் மறக்க… அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

1.மகரிஷிகளீன் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன நோய் நீங்க வேண்டும்
2.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் வாழ்க்கை வைரத்தைப் போல் பிரகாசிக்க வேண்டும் என்று உணர்வினை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
5.பிறவியில்லா நிலை அடைந்திட்ட அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள்
6.நம்மை நிச்சயம் அழைத்துச் செல்லும் நமது உயிர்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply