சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தி தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் முருகா என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

Leave a Reply