ககனமணி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ககனமணி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதன் ஞானியாக… தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?

உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.

சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.

சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம்… தான் கடைப்பிடித்து வரும் வழியில் “உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் இது தான்…” என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் (ISS) சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

Leave a Reply