ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நெற்றியின் மையத்தில் மஞ்சளும் குங்குமமும் தரித்து
2.ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி
3.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே
4.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.

மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்புதான்…!

ஒவ்வொரு மனிதனின் அக்கவன நரம்பு செய்யும் செயல் கொண்டுதான் அம் மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி…
1.நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து
2.அவ்வுயிர்த் துடிப்புடன் இக்கவன நரம்பு அதனை ஈர்த்து
3.நம் மண்டையின் பின் பாகத்திலுள்ள சிறு மூளையில் மோதச் செய்து
4.அதன் வழித்தொடரில் இருந்துதான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ… பின்னப்பட்டாலோ… உடல் உறுப்புகளின் நிலையும் சரி… நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி.. “அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது…!”

“இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது…” என்று நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர்.
1.மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள்
2.பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் இக்கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலிலுள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருந்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும்.

ஆனால் இந்த நெற்றியில் உள்ள கவன் நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ கவன நரம்பில் அடிபட்டு அதனால் அதன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெருமூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில்தான் இருந்திடும். ஆனால்…
1.இக்கவன நரம்போ… இக்கவன நரம்பை ஈர்த்துச் சிறு மூளையின் உதவி கொண்டு
2.இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால்
3.தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது.

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா… இக்கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான்… “இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்கின்றோம்…”

இதயத்திலுள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம். இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறு மூளையும்தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.

இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன் இவ்வாத்ம சக்தியைத் தந்த ஆதி சக்தியின் செயல் சக்தியின் செயல்தான்.

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும்… கவன நரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான் அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக் கண்ணை வைத்துத்தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது. ஒவ்வோர் ஆத்மாவிற்குமே நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண்ணினால் தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

1.கவன நரம்பைத்தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக்கண்ணாகவும்
2.நம் முன்னோர்கள் புராணக்காலங்களில் இதனை உணர்ந்து அதற்கு உருவம் தந்து சிவனாக்கி
3.சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளைப் புரியாத நிலையில் சூட்சுமமாக… ஆண்டவன் வாழ்ந்ததாகவும் அதற்குகந்த நிலைகளை உணர்த்த “ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி…” பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மை நிலைகளை உணர்ந்திருக்கலாம்.

இராமாயணமும் மகாபாரதமும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவற விட்டு இருக்கும் நிலையை எய்தியிருக்க வேண்டியதில்லை.

1.அன்று போதிக்கப்பட்ட அரும் பெரும் பொக்கிஷமெல்லாம்
2.இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்…
1.இக்கவன நரம்பின் துணையினாலேயே
2.ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்…!

Leave a Reply