கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

alcor-mizars

கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டே உள்ளது.

குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டிய அந்த உணர்வின் தன்மைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டபின் அந்த உணர்வின் வலுவான எண்ணம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் “பரமாத்மாவாக” (காற்று மண்டலத்தில்) மாறுகின்றது.

1.இந்த அருள் உபதேசங்கள் உங்கள் செவிகளில் படும்போது அதனின் உணர்ச்சிகளாக உங்களுக்குள் தூண்டப்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் வழி அதனின் நினைவாற்றல் உங்கள் கண்களுக்கு வந்து
3.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர நேருகின்றது.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வருகின்றது. அந்த எண்ணத்தின் தன்மை உங்கள் “ஆன்மாவாக” மாறுகின்றது. அப்போது நீங்கள் அதை நுகர்ந்தால் அது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும் உங்களுக்குள் அணுத் தன்மையாக மாறுகின்றது.

1.பின் அந்த அணுக்கள் வாழ அதன் உணர்வுகளை… உணர்ச்சிகளை… உந்தும்.
2.அப்படி உந்தும் போது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அதிகரிக்கும் தன்மை வரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கணவனும் மனைவியும் இரு உணர்வும் இரண்டறக் கலக்கப்படும்போது
1.இன்று தன் தன் இனத்தை நாம் எப்படி உருவாக்குகின்றோமோ அது போல
2.கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரு உடலிலும் இணைந்து வாழச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து இந்த உணர்வை ஒளியாக மாற்றி… இந்த உடலை விட்டு யார் முந்திச் சென்றாலும் அதன்பின் அடுத்தவரையும் அந்த ஆன்மாவையும் தன்னுடன் இணைத்தே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “இணை பிரியாத நிலைகள் கொண்டு…” அந்த ஒளியின் உணர்வை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

1.இங்கே எப்படிக் கணவனும் மனைவியாக மகிழ்ந்து வாழ்கின்றோமோ
2.அதே மகிழ்ச்சியின் தன்மை அங்கேயும் இருக்கும்.

ஒவ்வொரு விஷத்தின் தன்மையும் தன்னுடன் மோதும்போதும் அந்த விஷத்தின் தன்மையைத் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அத்தகைய உணர்வைக் கவரும் போது இன்று நாம் எப்படி இயற்கையில் விளைந்த உணவைச் சமைத்து உட்கொண்டு… அதில் மகிழ்ச்சி பெறுகின்றோமோ… அதைப்போல எத்தகைய தன்மையின் நிலையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

என்றுமே ஏகாந்த நிலையாக… எதிர்ப்பே இல்லாத நிலைகொண்டு இன்று நாம் எப்படி இங்கே வாழ்கின்றோமோ இந்த நினைவாற்றல் எல்லாம் அதற்குள்ளும் உண்டு.
1.இரு உயிரும் ஒன்றென இணைந்து
2.ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றது.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண் பெண் என்ற நிலைகளில் மோதுண்டு தான் ஒரு உயிரின் தன்மையை உருவாக்குகின்றது. அந்த உயிர் மற்றொன்றைக் கவர்ந்து அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மையாக உடல் பெறுகின்றது.

இதைப் போலத்தான்… கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து விட்டால் இந்த உணர்வுகள் அனைத்தும் “பிறவியில்லா நிலை..” என்ற நிலைகளை அடைய உதவுகின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply