
“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்
வைரம் எவவறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.
ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.
இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.
அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.
அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?
இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.
பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.
இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.
எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்து பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.
ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.
ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவு கோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால் அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
3.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.
புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.
மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.
அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)
இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.
ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.