ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஆனந்தத்தைச் சொந்தமாக்கும் பயிற்சி…!

mamaharisi eswarapattar

ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஆனந்தத்தைச் சொந்தமாக்கும் பயிற்சி…!

 

உதாரணமாக நம் வாழ்க்கையில் காரம் கொண்ட உணர்வுகளை அதாவது கோபமான உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க அந்தக் காரத்தின் தன்மை தான் அதிகரிக்கும். சர்க்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் அதிகமாகி அதனால் வேதனையே மிஞ்சும்.

அப்படிக் காரமாக ஆகும் சமயத்தில் காரத்தைக் குறைக்கும் சக்தியை நாம் இணைக்க இணைக்கத் தான் அந்தக் காரம் தணியும். காரத்தைத் தணிக்கும் சக்தி எது…?

1.காரத்தையும் வேதனையும் விஷத்தையும் தணித்த
2,அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நொடியிலேயும் நுகர வேண்டும்.
3.அதை நுகரும் சக்தி நமக்குள் வேண்டும்.
4.அதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்…
1.குருநாதர் “அவருக்குள் வளர்த்ததை” எனக்குள் பதிவு செய்தார்.
2.அதை நான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

சாமி ஒன்றும் கொடுக்கவில்லையே…! என்று தான் நீங்கள் நினைக்கின்றீர்கள்.

1.அவர் சொன்னார்… பதிவு செய்தேன்..
2.அவர் வழிகளிலே சென்றேன்… அதைப் பெற்றேன்.
3.பெற்ற அந்த அருள் உணர்வினை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து
4.அதை உங்களிடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செருகுகின்றேன்.

இதை நீங்கள் சீராகப் பின்பற்றி… தீமையை அகற்றிவிட்டுச் சந்தோஷம் அடைந்தேன் என்று சொன்னால் அந்த உணர்வு எனக்குள் வந்து என்னையும் சந்தோஷப்படச் செய்யும்.

நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டேன்… எடுத்தேன்… எனக்குள் வளர்த்தேன்… எல்லாவற்றையும் அறியச் செய்தார் குருநாதர்…!

அதே போல் உங்களை அறியாது துன்பங்கள் வருகின்றது. அந்த நேரத்தில்…
1.நான் கண்ட உண்மைகளை வாய் மொழியாக உணர்வைப் பதிவு செய்கின்றேன்
2.பதிந்த நிலைகளை நீங்களும் உடனுக்குடன் எண்ணித் தீமைகளை நீங்கள் அகற்றிப் பழகினால்
3.அதை நினைத்தவுடனே எனக்குச் சந்தோஷமாக இருக்கும்.
4.சரி… தீமையை நீக்கிடும் சக்தியாக வளர்ந்திருக்கின்றார்கள் என்று..!

ஆக… நீங்கள் அந்தத் தீமையை அகற்றும் வல்லமையைப் பெற்றால்… “அதற்குரிய உணர்வின் வித்து” அங்கே இருக்கின்றது.
1.அதே உணர்வை நீங்கள் கேட்டுணர்ந்தது… பின் விளைந்து…
2.அது வெளி வரப்படும் பொழுது எனக்கு அது சொந்தமாகின்றது.

இதே போல தான் நீங்களும் உங்களுக்குள் பதிவு செய்த இந்த அருள் ஞானத்தின் சக்திகளை எடுத்து அந்த வளர்ச்சி அடைந்த நிலைகளில்
1.உங்கள் நண்பரிடத்தில் “நன்றாகி விடும்…!” என்ற
2.உங்கள் வாக்கினைச் சொன்னால் அங்கேயும் பதிவாகின்றது.,

அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அவர்கள் வாழ்க்கையிலே அதைக் கடைப்பிடித்த பின்… “நீங்கள் சொன்னீர்கள்… எனக்கு நன்றாக ஆனது…!” என்று அவர் சொன்னால் அது உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்தச் சந்தோஷம் உங்களுக்குச் சொந்தமாகின்றது…!

ஈஸ்வரபட்டர் காட்டிய மெய் வழி இது தான்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply