
மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை
யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைத் தொடர்ந்து நீங்கள் கேட்டுக் கொண்டே வருகின்றீர்கள். இதிலே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அன்புடன் பண்புடன் கேட்டறியும் மற்றவர்களின் உணர்வுகள்
1.உங்களுக்குள் அது எப்படி அறியாது தீய வினைகளாக உருவாகின்றது…?
2.நல்ல அணுக்களை உருவாக விடாதபடி எப்படித் தடுக்கிறது…? என்பதை நீங்கள் அறிந்து
3.ஒவ்வொரு நிமிடத்திலும் அதை நல்லதாக மாற்றும் சக்தியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
4.முருகு..! – மாற்றியமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு.
கோபப்படுவோரைப் பார்த்துவிட்டால் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.
நாம் புறக் கண்களால் பார்க்கப்படும் பொழுது நுகர்ந்தது நம் உயிரிலே பட்டுத்தான் நம் உயிர் அகக்கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றப்படும் பொழுது இது நெற்றிக் கண்ணாகின்றது.
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்…! என்று ஏற்றப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.
ஆகவே சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான். புறக்கண்களால் பார்த்த இந்தக் கோபத்தின் உணர்வுகள் இங்கே வரப்படும் பொழுது இதை அடக்குகின்றது.
இப்படி அடக்கிய நிலைகள் வரப்படும் பொழுது யார் கோபப்பட்டார்களோ அவர்களைப் பார்க்கும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் தீமைகள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும்
3.ஒன்று சேர்த்து வாழும் அந்தச் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
குழம்பில் பல சரக்குகளைப் போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போல் அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் வளராதபடி அருள் உணர்வை எடுத்துக் கலந்தால் அந்த அணுவின் தன்மையாக உருவாகின்றது.
1.அத்தகைய அணுவாகி விட்டால்
2.அந்த அருள் உணர்வு (துருவ நட்சத்திரம்) தான் அதற்கு உணவாகத் தேவை.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் கருவாக்கி அணுவாக உருவாக்குகின்றது நம் உயிர். உயிரின் வேலை அது தான்…!
செடி கொடிகளில் பல உணர்வைச் சேர்த்து ஒரு புதுச் செடியாக உருவாக்கும் பொழுது
1.எதன் பங்கு விகிதாச்சாரம் வருகின்றதோ
2.அதன் வழி அந்தச் செடி வளர்ந்து அதனுடைய கனிகளையும் வித்துகளையும் உருவாக்குகின்றது.
இதைப் போன்று தான் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.