வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

sage Valmiki

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

 

வேடனாக இருந்த வான்மீகி இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கும் நிலையில் ஒரு பட்சியைக் குறி வைத்து அதைத் தாக்கி மடியச் செய்கின்றான்.

பட்சி அடிப்பட்டதைக் கண்டதும் அதனுடன் கூட வந்த பட்சியோ பாசத்தால் துடிக்கின்றது. தன்னுடைய பாச உணர்வைக் கண்கள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

வேடனான வான்மீகியோ அந்தப் பறவையும் குறி வைக்கின்றான் தாக்குவதற்கு…! ஆனாலும் அது வெளிப்படுத்தும் பாச உணர்வுகள் இவனுக்குள் ஊடுருவுகின்றது. ஆகையினால் அவனால் அந்தப் பட்சியை வீழ்த்த முடியவில்லை. பல முறை முயற்சித்தும் குறி தப்புகிறது.

இப்படி அந்தப் பறவையின் எல்லை கடந்த பாச உணர்வுகள் இவனுக்குள் சென்றதும்
1.தன் இனத்தின் பாச அலைகள் எப்படி இருக்கின்றது..? என்று சிந்திக்கச் செய்கிறது
2.அதையே உற்றுப் பார்க்கும் பொழுது அது தன் பாசத்தால் துடிக்கும் உணர்வுகள்
3.வேடன் கண் வழி நுகரும் இந்த உடலுக்குள் அந்தப் பாச உணர்வுகள் தூண்டிய பின்
4.இந்தப் பறவைக்கு இருக்கும் பாசம் கூட தன்னிடம் இல்லையே…! என்று அந்தக் கொல்லும் நிலைகளை இங்கே மாற்றுகிறது.

இதைத்தான் நாராயணன் (சூரியன்) திரேதாயுகத்தில் (உடலுக்குள்) சீதாராமனாகத் (எண்ணங்கள்) தோன்றுகின்றான் என்று பிற்பாடு வான்மீகி சொல்கின்றான்.

சூரியனின் காந்த சக்தி பட்சியின் பாச உணர்வைக் கவர்ந்து சீதாலட்சுமியாக மாறுகின்றது. அதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் கூர்மையாகும் பொழுது சீதாராமனாக
1.அதனுடைய பாச உணர்வுகள் இவனுக்குள் அந்த எண்ணங்கள் தூண்டி
2.இவனுக்குள் இருக்கும் தீமையை மடக்குகின்றது.
3.மனித உடலுக்குள் தோன்றும் எண்ணங்களைப் பற்றி வான்மீகி இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

காவியங்களில் எப்படிக் கொடுக்கின்றார்கள்….? இந்திரலோகத்தில் நடக்கக்கூடியதை அந்த இரகசியங்களை நாரதர் தெரிந்து கொள்கிறார். தெரிந்ததை அவர் வெளிப்படுத்தவில்லை என்றால் அவருடைய வயிறு உப்பிவிடுமாம். அதற்காக வேண்டி இங்கே இந்த வேடனிடம் வருகின்றார்.

இந்த வேடன் (வான்மீகி) “தவறு செய்துவிட்டேனே…!” என்று உட்கார்ந்து தவமிருக்கத் தொடங்கினான். அதிலே ஒரு புற்றே வளர்ந்துவிட்டது.

புற்றுக்குள் அவன் என்ன செய்கிறான்…?

1.ஓ…ம் ஓ….ம் ஓ…ம் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஓ….ம் ஓ…ம் என்று தான் சொல்கிறான்.
2.அவன் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் ஓ.. என்று ஜீவ அணுவாக உடலாக ஆக்கிக் கொண்டுள்ளது.
3.இந்த உடலிலேயே புற்றாக வளர்கின்றது.

நாம் எடுக்கும் பொழுது ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றும் ஓ…ம் ஓ….ம் ஓ…ம் என்று உடலுக்குள் புற்றாகத் தான் வளர்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இப்படி “உடலின் அமைப்பாகின்றது…!” என்ற நிலைக்குத் தான் புற்றைக் காட்டினான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதை எல்லாம் ஏன் முன்னாடியே சொல்லவில்லை…? என்று நினைப்பீர்கள்.

எல்லாவற்றையும் மொத்தமாகச் சொல்லி விட்டோம் என்றால் அவைகளைக் கிரகிக்க முடியாது. அதற்காக வேண்டித்தான் சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்திரலோகத்திலிருந்து நாரதன் வந்து இரகசியத்தைச் சொல்கிறான். அவன் எப்படிச் சொல்கிறான்…? மரா…! மரா…! மரா…! ஏனென்றால் நேரடியாகச் சொல்லக்கூடாதாம்…!

மரா மரா மரா என்றால் ராமா ராமா ராமா என்று வந்து விடுகிறது. ஆகவே இந்த உணர்வின் தன்மை அந்த எண்ணங்களாக உருவானது என்று சொல்லக்கூடிய நிலைக்குக் காட்டுகின்றான்.

நாரதன் இவனிடம் சொல்கிறான் என்றால் இதை யார் சொன்னது…? அதனுடைய மூலக் கருத்து என்ன..?

இந்திரலோகத்தில் நடக்கும் இரகசியத்தை நாரதன் இவனுக்குள் சொன்னான். அந்த இந்திரலோகம் எது…?

இந்த உடலுக்குள் உள்ள இந்திரலோகத்திற்குள் (இந்திரீகம் – இரத்த நாளங்களுக்குள்) நடக்கும் இரகசியத்தை
1.நாரதனின் இச்சை… இவன் செவி வழி அவன் கட்டளையிடும் உணர்வுகள்
2.அந்தப் பட்சியின் பாச உணர்வின் தன்மையை உற்றுப் பார்க்கும் உணர்வு கொண்டு
3.இதை வான்மீகி நுகரப்படும் பொழுது அவனுடைய இந்திரலோகத்தில் ஊடுருவுகின்றது.

ஆக அங்கே நாரதனாகின்றான். தீமைகளை நீக்கும் அந்த உணர்வுகள் உட்புகுந்து அதுவே நாரதனாகி அவனுக்குள் இருக்கும் தாக்கும் உணர்வை… அந்தப் பகைமை உணர்வை அகற்றச் செய்கின்றான்.

இதனால் வந்த துன்பம் இது…! என்ற நிலைகளில் அந்த உணர்வுகள் உணர்த்துகின்றது. அப்பொழுது வான்மீகி திருந்துகின்றான். காவியத்தில் இப்படித் தெளிவாக்குகின்றான்.

1.உணர்வுகள் எப்படி எண்ணங்களாகின்றது..?
2.அந்த உணர்வுகள் எதிலிருந்து சத்தாகின்றது..? என்பது தான் சீதா.
3.அதனுடைய மணம் ஞானம்
4.அதன் வழிகளில் இந்த எண்ணங்கள் எப்படித் தீமைகளை அகற்றச் செய்கின்றது..? என்று இப்படிப் பொருள்பட உணர்த்தினார்கள்.

அன்று அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்தான். விண்ணை நுகர்ந்தான். துருவன ஆனான் துருவ மகரிஷியாக ஆனான்.

அவனின்று விளைந்த உணர்வுகள் இன்று அலைகளாகப் படர்ந்து வருவதை அதை எடுத்து உங்களுக்கு அந்தத் தெளிவின் நிலைகளை ஊட்டுகின்றோம்.

இந்த ஞானத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் பகைமை வராது பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த மாமகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்தே என்றும் வாழ முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply