கண்களைத் தூய்மையாக்கி உடலில் இருக்கும் “ஊழ்வினை என்ற எல்லா வித்துகளையும் நல்லதாக மாற்ற வேண்டும்…”
கண்ணின் கருவிழிக்குள் இருக்கும் கருமணிகள் தான் நாம் பார்ப்பதை எல்லாம் நமக்குப் படமாக்கிக் கொடுக்கிறது. கண் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் பொருதி இருக்கிறது.
வேதனை… வேதனை… என்ற உணர்வை அதிகமாக எடுத்துக் கொண்டால் கருவிழியில் அது பட்டு நாளடைவில் மாசுபட்டு விடுகின்றது. வேதனை என்பது விஷம்.
1.அது முன்னணியில் இருந்தால் நம் கருமணி விஷத் தன்மை அடைந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே விஷத் தன்மைகள் நம் உடலுக்குள் பரவப்பட்டு நம் உடலிலே கடும் நோயையும் உருவாக்குகிறது.
கண்ணின் கருவிழிக்குப் பின் இருக்கும் அந்த நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை கவர்ந்து கொண்டபின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமானமாகி நம் கண்களே மங்கிவிடுகின்றது அல்லது கண் பார்வை தெரியாமலே போய்விடுகிறது
ஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து “தான் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற வலுவான உணர்வு கொண்டு தான் கண்களே உருவானது.
நம் கண்களைத் தூயமைப்படுத்திக் கொண்டால் கண்கள் மாசுபடும் தன்மையை மாற்றலாம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இணைத்துப் பழகவேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் எண்ணக் கூடாது.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொன்னபடி
1.எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் கண்ணுக்குத் தான் வரும்.
2.அந்தக் கருவிழி அதைத் தான் கவரும்
நல்லதை எண்ணினாலும் வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள் வலிமை ஆகிவிட்டால் கண்கள் மாசுபட்டு விடுகிறது.
இதுபோன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தியானப் பயிற்சியாகவே கொடுக்கிறோம்.
கண்களுக்குப் பாதிப்பாக ஆனது போல் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை பரவி விட்டால் சரவாங்கி நோய்… வாத நோய்… போன்ற நோய்கள் வந்து விடுகின்றது.
நரம்புகளை உருவாக்கிய அணுக்கள் அதனின் செயலாக்கங்கள் மடிந்து விட்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்காது.
அதே சமயத்தில் எலும்பு மண்டலங்களிலும் நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வு எடுக்க எடுக்க நம் எலும்பை உருவாக்கிய அணுக்களும் பலவீனமாகிவிடும்.
சில நேரங்களில் என்ன ஆகிப் போகும்…?
ஒன்றுமே செய்ய வேண்டாம். வெறுமனே எங்கேயாவது கையை ஊன்றினால் போதும்.. கை ஒடிந்து விட்டது…! என்று சொல்வார்கள். நடந்து தான் போனேன்… என் கால் ஒடிந்து போனது என்பார்கள்…!
எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குள் வேதனை வேதனை என்ற உணர்வால் அதனின் வலிமை இழக்கப்படும் பொழுது எலும்புகளின் பலம் குறைந்து விடுகிறது.
எல்லாவற்றிற்கும் மூலம் நம் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் தான்.
நிலத்திற்குள் மண் வளம் மறைந்து உள்ளது. அதற்குக் கீழ் ஆழத்தில் நீரும் இருக்கின்றது.
1.குறைந்த காலம் வாழும் தாவர இனங்கள் (சில செடி கொடி புல் பூண்டுகள்)
2.நிலத்தில் பரவி இருக்கும் நிலங்களிலிருந்து நீரை எடுக்கிறது.
3.நிலத்தின் ஆழப் பகுதியில் ஓடும் நீரை எடுப்பதில்லை.
ஏனென்றால் நிலத்திற்கு அடியில் பாறைகளும் உண்டு கல்களும் உண்டு. சிறிது காலமே வாழும் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அதனால் நிலத்தின் மீது நீர் இல்லை என்கிற பொழுது உடனே வாடிவிடுகிறது. ஆனால்
1.மரமாக வளரும் பட்சத்தில் அந்த மரம் தன் விழுதுகளைப் பாய்ச்சி
2.அந்த நீரை எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி அதற்கு இருக்கின்றது.
அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் அருளாற்றல்களை நம் எழும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக்கி
1.என்றுமே… எங்கிருந்தும்… எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தியாக
2.நாம் நமக்குள் பதிவாக்க வேண்டும்
அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை அதிகமாகக் கவர முடியும்.
ஒரு நோயாளியை உற்றுப் பார்த்தால் நம் கண்ணில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்குகிறது அது பதிவானால் தான் நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறிய முடிகின்றது.
நம் உடலோடு இணைத்துக் கொள்ளும் நிலையாகப் பதிவு (RECORD) செய்வது தான் கண்ணின் கருவிழியின் வேலை. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எது பதிவானதோ அதனின் உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரின் காந்தபுலன் கவர்ந்து அது உயிரான்மாவாக மாற்றுகின்றது. ஆகவே இதில் எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் “சேர்க்கை…!”
1.இப்படி எத்தனையோ வருடங்கள் சேர்த்து வைத்த உணர்வுகள் அனைத்தும்
2.ஊழ்வினை என்ற வித்தாக உடலிலே இருக்கிறது.
கோபம் வேதனை வெறுப்பு பயம் போன்ற வித்துக்கள் ஊழ்வினையாக உடலிலே இருந்தால் நமக்குள் தீமையான உணர்வுகளையே தூண்டி அதையே சுவாசிக்கச் செய்து தீமையின் விளைவாகவே ஊழ்வினைப் பயனாகிவிடும்.
ஒரு நிலம் கெட்டுப் போனால் அதிலே நல்ல பயிர்களை நாம் வளர்க்க முடியாது. ஆனால் அந்த நிலத்தைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்தால் நல்ல பயிர் இனங்களை அதில் வளர்க்க முடியும்.
அதைப் போல நம் உடல் என்ற நிலத்தைப் பண்படுத்த
1.துருவ நட்சதிரத்தின் உணர்வை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி அதைப் பண்படுத்தி
2.நல்ல உணர்வுகளைப் பதிவாக்கும் நிலைகளுக்கு நாம் ஊழ்வினையை மாற்ற வேண்டும் (இது முக்கியம்).