பொது நலம் என்பது இன்று எப்படி இருக்கிறது…?

Socialism

பொது நலம் என்பது இன்று எப்படி இருக்கிறது…?

 

அன்று ஆண்ட அரசர்களின் செயல்களால் தான் இன்று இந்த உலக நிலைகளிலேயே “ஒருவனை ஒருவன் அடக்கி ஆளும் நிலைகள் ஏற்பட்டு விட்டது…!”

மனிதனாக வளர்ந்து வந்த நிலையில் அரவணைக்கும் உணர்வை மறந்து அடக்கி ஆளும் தன்மையே வருகின்றது.

1.எப்படியும் ஒரு வகையில் மற்றவர்களை மிரட்டி வாழ்வது.
2.இல்லை எனறால் பொருளைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்குவது.
3.அடிமையாக்கிய நிலைகள் கொண்டு அவர்களிடமிருந்து தான் பெறவேண்டிதைப் பெற்றுத் தன்னுடைய சுகத்திற்கு வருவது.

ஆனால் அப்படிக் கொடுத்துப் பதிலுக்கு உதவவில்லை என்றால்… தான் எண்ணியபடி வரவில்லை என்றால்… உடனே நான் இன்னதைச் செய்தேன்.. நீ எனக்கு எதையும் செய்யவில்லை என்று அவருக்குத் தீங்கிழைக்கும் நிலையே இங்கு வருகின்றது.

ஒருவருக்கு உதவி செய்யப்படும் போது தனக்கு இணைந்தவனாக வரவேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்கும் நிலையே வருகின்றது.

இன்று வாழும் மனிதர்கள் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி உதவிகள் செய்வதும் உதவி செய்த பிறகு தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்தேன்
2.ஆனால் அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை.
3.ஆகவே அவன் தீங்கு உள்ளவன் ஆகிறான் என்று
4.பகைமை உணர்வுகளைத்தான் நாம் வளர்க்கின்றோம்

ஆக மொத்தம் பகைமை கொண்டு ஒரு பக்கம் பகையை வளர்க்கின்றோம். அல்லது அன்பு கொண்டு தனக்குள் அடிமை ஆக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.
1.உண்மையிலேயே நல் உணர்வின் தன்மை கொண்டு அவருடன் ஒன்றி வாழவேண்டும்,
2.இணைந்து வாழவேண்டும்… துயரங்கள் நீங்க வேண்டும்… பேரருளைப் பெற வேண்டும்… என்ற
3.இந்த உண்மையின் நோக்குடன் பிறருக்கு உதவி செய்தால் அங்கு எதிர்பார்க்கும் தன்மை இருக்காது.
4.(ஏனென்றால் உதவி செய்தேன் என்றால் பதிலுக்கு அவரிடம் எதையாவது ஒன்றை எதிர் பார்க்கும் தன்மையே வருகின்றது)

இன்று பல இடங்களில் பார்க்கலாம்…! சில உபகாரங்களைச் செய்வது போல செய்வார்கள். ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமை ஆக வேண்டும்.

அப்படி அடிமை ஆகவில்லை என்றால் இவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் இந்தத் தன்மைகள் தான் இங்கே வருகின்றது.

ஒன்று அடக்கி ஆள்வது… இரண்டாவது அரவணைத்துப் பார்ப்பது… தன் வழிக்கு வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்குவது…!
1.மக்கள் மத்தியில் இது தான் அதிகமாக வருகின்றது.
2.இது எல்லாம் சுயநலத்தைக் கூட்டுகின்றது… பொது நலம் ஆகாது…!

ஆனால் பொது நலத்தின் தன்மையாக அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து விட்டால் குற்ற இயல்புகள் இருவர் இடத்திலும் வராது.

பண்பினைக் காக்க பரிவினை ஊட்ட அன்பினைக் கூட்ட அரவணைக்கும் உணர்வாக வந்தால் நாம் செய்த பண்பின் அரவனைப்பு நமக்குள் என்றுமே நிலைத்து இருக்கும்.

ஆகவே அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் இருளை அகற்றிடும் நிலை அனைவரும் பெற வேண்டும். வாழ்வில் எல்லோரும் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

Leave a Reply