கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் ஜீவன் பெற்று வாழச் செய்யும் “இயற்கையின் படைப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!”

Nature is God

கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் ஜீவன் பெற்று வாழச் செய்யும் “இயற்கையின் படைப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!”

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் இடங்களில் எல்லாம் உயிர் அணுக்கள் ஜீவன் பெற்று வாழ்கின்றன. பூமியின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

அதே போல் காற்றிலும் பல உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. வான மண்டலத்தில் பல உயிரணுக்கள் பறந்து இக்காற்றினில் வீசிடும் பல உயிரணுக்களையே ஆகாரமாக எடுத்து அந்த நிலையிலேயே முட்டையிடுகின்றது.

அந்த முட்டை மேலிருந்து கீழ் வரும் பொழுது பூமிக்கு வந்து தாக்குவதற்கு முதலிலேயே வான மண்டலத்திலேயே அந்த முட்டை வரும் வேகத்திலேயே வெடித்து குஞ்சு வெளிப்பட்டு அந்தக் குஞ்சு அந்த நிலையிலேயே பறக்கும் நிலை பெற்று உயிர் வாழ்கின்றது.

இப்படி பூமிக்கும் உயிரணுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே வான மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. அதே போல்
1.பூமியிலும் கல்லுக்கடியில் தேரை எப்படி வந்தது…?
2.அந்தத் தேரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் தாயினம் இருந்ததா…?
3.மாம்பழத்திற்குள் வண்டு எந்த நிலை கொண்டு உள்ளே சென்றது…?
4.பூவிலேயே முட்டையிட்டு அந்த முட்டை அதே நிலை கொண்டு உயிர் பெற்றதா…?
5.பூ காயாகிக் கனியாகும் வரை அந்த முட்டை அங்கேயே முட்டையிலிருந்து புழு வந்து வண்டானதா..? என்று எல்லாம் எண்ணுகின்றோம்.

இதன் நிலையை ஆராய்ந்து உண்மை அறிந்தோர் வெளியிடவும் இல்லை. ஆனால் பல மெய் ஞானியர்கள் அறிந்த பேருண்மை இது.

மாம்பழத்தில் வண்டு வந்ததின் உண்மை நிலை அந்த மரத்தில் பூப்பிடித்துக் காயாகும் தருணத்தில் அந்தப் பூவில் உள்ள ஈரப்பசை கொண்டு அக்காய் பிடித்து அது கனியாக ஆவதற்கு முன்
1.அந்தக் காய்க்கு மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் பொழுது
2.அந்த ஒளிக் கதிரிலிருந்து காயில் உள்ள ஈரப்பசையின் சுவாச நிலைக்குகந்த உயிரணு
3.அந்தக் காயிலேயே தான் உற்பத்தியாகின்றது.

சூரிய ஒளி பட்டவுடன் அவ்வுயிரணு ஜீவன் பெற்றுப் புழுவாகி வண்டாகி அந்தக் காயில் உள்ள மாங்கொட்டையின் பருப்பினையே உணவாக ஏற்று மாங்காயின் உள்ளேயே உயிர் வாழ்கின்றது.

அதன் சுவாச நிலைக்கேற்ப ஆகாரமும் அம்மாங்காயிலே தான் அதற்குக் கிடைக்கின்றது. அந்தக் கனியைப் பறித்து அதை அறுத்துப் புசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அந்த வண்டு வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட வண்டிற்கு வேறு நிலையிலுள்ள (வெளி உலக) சுவாசத்தை ஈர்க்கும் தன்மை இல்லாததினால் கனியிலிருந்து வெளிப்பட்ட உடனே அது மடிகின்றது. அதன் சுவாசத்திற்குகந்த ஆகாரம் இல்லை என்றால் அதனால் வாழ்ந்திட முடியாது.

கல்லுக்குள் தேரை வந்ததும் இதே நிலையே. கல்லிற்குள் இருக்கும் ஈரப்பசையில் கல்லிற்கு மேல் படும் சூரிய ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தில் அங்கேயே ஒரு ஜீவன் உற்பத்தியாகி அது வாழ்ந்து அந்தக் கல்லுக்குள்ளேயே மடிகின்றது.

1.எல்லா உயிரணுக்களுக்கும் தாய் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை இல்லை.
2.தேரை மாம்பழத்தில் உள்ள வண்டு ஈ கொசு எறும்பு விட்டில் பூச்சிகள் ஈசல்கள் பலவிதமான புழுக்கள் இவைகளில் எல்லாம்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை… தாய் தந்தை என்ற நிலையும் இல்லை.
4.சூரிய சக்தியிலிருந்து அந்தந்த நிலைக்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு உயிர் பெற்று வாழ்வதுவே.
5.இப்படி இயற்கையின் சக்தியிலே பல கோடி உண்மைகள் உள்ளது.

அதற்காகத்தன் நம் முன்னோர்கள் இயற்கையையே ஆண்டவனாகப் பணித்தார்கள்.
1.இந்த இயற்கை தந்த ஆண்டவனைக் கண்டவர்கள் இந்த உலகிலே யாரும் இல்லை.
2.இந்த உலகில் மட்டுமல்ல… சூட்சம நிலை பெற்ற பாக்கியவான்களாலும்…
3.இயற்கை சக்தி தந்த ஆதி அன்னையை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

அவள் தந்த சக்தியையே சூரியனையும் காற்றையும் மழையையும் இவற்றின் அருள் பெற்ற இயற்கை அன்னையையும் என்றென்றும் நாம் எண்ணி வணங்கிடுவோம்… போற்றிடுவோம்…!

இயற்கையின் அன்பு நிலையில் நம்மையும் அன்பு கொண்டு
இயற்கைகளின் இயற்கையையும் (படைப்புகளையும்) அன்பாக்கி
இயற்கை அன்னை தந்த – அந்த இயற்கையில் வந்த நாமும்
இயற்கையுடனே ஒன்றி அன்பு கொண்டே என்றும் வாழ்ந்திடுவோம்.

Leave a Reply