கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

lord-shiva-wisdom-fruit

கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

 

கந்த புராணத்தில் நாரதன் கனியைக் கொண்டு வந்து கொடுப்பதாகக் காட்டியிருப்பார்கள். அப்பொழுது சிவன் சொல்கிறான்…
1.கலகத்தை மூட்ட நீ இங்கே கனியைக் கொண்டு வந்துவிட்டாயா என்ன…?
2.சரி சொல்… இது எது என்று பார்க்கிறேன்…! என்று
3.நமக்குத் தெளிவுறுத்த கந்த புராணத்தில் இவ்வாறு காட்டப்படுகிறது.

இந்த உலகை யார் முதலில் வென்று வருகின்றனரோ அவருக்கு இந்த ஞானக்கனி என்று சொல்லப்படுகிறது.

உடனே ஆறாவது அறிவு கொண்ட இந்த உணர்வின் எண்ணங்களைப் பல வாறு செலுத்தி
1.நான் மகிழ்வாகனன்…
2.நான் எதையுமே மகிழ்ச்சியாகப் படைக்கும் தன்மை கொண்டவன்
3.நான் எதையுமே சுழன்று வரவேண்டும் (முடியும்) என்ற “அகம்…!” அங்கு வளருகின்றது.
4.ஆனால் தாய் தந்தையை மறந்து விடுகின்றது…!

ஆறாவது அறிவு (முருகன்) விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு பரவி தன் ஞானத்தாலே புற உலகைத் தன் எண்ணத்தின் திறன் கொண்டு எண்ணுகின்றான்.

ஆனால் இங்கே நாரதன் நீ இந்த உடலிலே சேர்க்க வேண்டிய வினை எது…? என்று கேட்கின்றான்… (காட்டுகின்றான்).

எந்த அன்னை தந்தை உடலிலிருந்து நீ பெற்றாயோ அந்த வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். பேரண்டமும் பேருலக சத்தினுடைய தன்மையையும் உன் அன்னை தந்தையர் தான்.

அவர்கள் ஏங்கி எடுத்து அந்த உணர்வின் தன்மையால் உன் உடலை உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாகத்தான் நீ உருவாகி இருக்கின்றாய்…!

பிஞ்சாக இருந்து துவர்ந்து அது காயாகும் போது புளித்து அது கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப்போல
1.உன் அன்னை தந்தையர் அந்தக் கனியின் தன்மை பெறவேண்டும்.
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று அங்கே நாரதன் காட்டுகின்றான்.

ஏனென்றால் மெய் உணர்வின் தன்மை பெற்று இந்த மனித உடலில் உயிரின் தன்மை கனியாகி என்றும் அது சுவை கொண்டதாக விண்ணிலே சுழன்று கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த அந்த மணம் தான் “நாரதன்…!”

1.உன் அன்னை தந்தையை நேசித்து
2.அந்த உயர்ந்த அருள் சக்திகளை அவர்கள் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை
3.இதை வினையாக உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று கந்த புராணத்தில் நமக்குத் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

அன்னை தந்தையர் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நம்மை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டிப் பட்ட எத்தனையோ பல துயரத்திலிருந்து மீண்டு “என்றும் பதினாறு” என்ற அழியாதை நிலைகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணச் செய்தார்கள் அன்று ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அந்த மெய் வழியில் அந்த ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதைத் தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் அதைத் தன் அன்னை தந்தைக்கு ஆராதனையாகக் கொடுத்து “விண் செலுத்த வேண்டும்…!” என்று காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து விஷத்தை ஒடுக்கி என்றும் அழியாத நிலைகள் கொண்டு நிலையான ஒளிச் சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.

இவ்வாறு அவர்களை விண்ணுக்கு அனுப்பி இந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் இணைத்துக் கொண்டால்தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் நாமும் அந்தச் சூட்சும சரீரத்தைப் பெற முடிகின்றது.

1.அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாக சேர்த்து
2.உன் மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
3.கனியாகப் பெற்ற அந்த ஞானிகளின் அருள் சத்தை உனக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி
4.அதே கனியின் தன்மை தன் தாய் தந்தையர் பெற வேண்டும் என்ற ஏக்க நிலைகளைப் பெறவேண்டும் என்பதற்காக கதைகளாக இப்படி உணர்த்துகின்றார்கள்.

நாம் கதையை எப்படிப் படித்து அர்த்தம் காண்கின்றோம்…? விநாயகர் அம்மா அப்பாவைச் சுற்றி வந்தார். அதனால் அவருக்கு ஞானக் கனி கிடைத்து விட்டது…! என்று தான் நாம் சாதாரணமாகப் பார்க்கின்றோம்.

விரிவடைந்த நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “எதனையும் செய்திடுவோம்…! என்ற இந்த உணர்வை ஓங்கிச் செய்யப்படும் போது பொருள் ஆக்கத்தை இழந்து பரந்த மனம் கொண்டு எங்கேயோ (சூனியத்திற்கு) போகின்றது.

நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட நம் தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் நம்மை (மனிதனாக) உருவாக்கி நல் வழி காட்டுகின்றது என்ற நிலையைத்தான் ஞானிகள் அன்று தெளிவாக்கியுள்ளார்கள்.

அவ்வாறு நமக்கு நல் வழி காட்டிய நம் தாய் தந்தையரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் ஒளி துணை கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை விட்டு வென்று மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நின்று என்றும் பதினாறு என்ற கனியின் நிலைகள் அடையச் செய்ய வேண்டும் என்பதே “நாரதன் கொடுக்கும் ஞானக் கனியின் தத்துவம்…!”

ஆகவே விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.தாய் தந்தையின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அருள் வழியிலே எங்களுக்குள் வரும் இருள் நிலைகளை நீக்கிடல் வேண்டும்
3.மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் தகுதியினை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி
4.இத்தகைய நல்ல வினைகளைச் சேர்க்கும் விதமாக பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள் ஞானிகள்.

Leave a Reply