இந்தத் தியானத்தின் மூலம் மாந்திரீகமோ தாந்திரீகமோ எதுவும் அருகில் வராது…!

ghost

இந்தத் தியானத்தின் மூலம் மாந்திரீகமோ தாந்திரீகமோ எதுவும் அருகில் வராது…!”

மாந்திரீகம் தாந்திரீகம் என்று செய்பவர்கள் கருவை வைத்து (ஒரு உடலில் விளைந்த உணர்வை) விளையாடுவார்கள். அந்தக் கருவை வாடகைக்கு வாங்கிப் பல வித்தைகளைச் செய்வார்கள்.

அந்தக் கரு வித்தை விளையாடுகிறவர்களோ அல்லது அதைப் போன்ற சாமியார்களையோ நீங்கள் பார்க்கலாம். அவர்கள் அப்படியே இருந்து கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று இப்படி ஒரு சுண்டு சுண்டும்.
2.அப்படிச் சுண்டினால் ஏவப்பட்ட ஆவியின் உணர்வு அங்கு இருக்கிறது என்று அர்த்தம்.

சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். தலையை “வெடுக்…” என்று சுண்டுவார்கள். எதைக் கருவாக உள்ளுக்குள் செலுத்தினானோ அந்த ஆவி உள்ளே இருக்கின்றது என்பதை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் பிறரிடத்தில் எடுத்து கொண்ட ஆவியின் தன்மைகள் அதனின் இயக்கம் அப்படிக் காட்டும். அந்த ஆவியின் தன்மை கொண்டவர்களுக்குத் தியானம் சீராக எடுக்கின்றவர்களைப் பார்த்தாலே “மயக்கம்…” வரும்.

கொடுமைப்படுத்தப்பட்ட ஆன்மா அந்த உடலுக்குள் இருந்தது என்றால் இந்த உண்மையை தியானம் செய்பவர்கள் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் கண் என்ன செய்யும்…? நம்மை அப்படியே முறைத்துப் பார்க்கும்.

என்னை அதர்மத்தில் கொன்றார்கள்…! என்ற இந்த உணர்வை இந்த உடலுக்குள் இருந்து தன் “கண்” வழியாகக் காட்டும். தியானம் செய்ப்வர்கள் நீங்கள் அனுபவரீதியில் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.

1.நாம் என்ன நினைப்போம்…?
2.நான் அவர்களை ஒன்றுமே சொல்லவில்லை…!
3.என்னை “இப்படி முறைத்துப் பார்க்கின்றார்களே…!” என்று எண்ணுவோம்.
4.ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் அந்த உடலுக்குள் இருக்கின்றது.

கரு வித்தைகளை வாங்கிக் கொண்டு வந்தவர்கள் நிறையப் பேரிடம் இதைப் பார்க்கலாம். பேசிக் கொண்டு இருந்தவுடனே இப்படி வெடுக்கென்று சுண்டுவது… தலையைச் சுண்டுவது… தெரியாத மாதிரி எல்லாம் அவர்கள் நடித்துப் பார்ப்பார்கள்.

மாந்திரீகம் தாந்திரீகம் செய்பவர்களும் சரி…! யாருக்குள் அதை அவர்கள் பாய்ச்சினார்களோ அவர்களும் சரி…! மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று நரக வேதன்யைத்தான் அனுபவிக்க முடியும். தப்பிக்கும் மார்க்கமில்லை.

ஏனென்றால் இன்னொரு ஆன்மா ஒரு உடலுக்குள் போகும்போது என்னென்ன வேலைகள் செய்கின்றது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறோம்.

பக்தி மார்க்கத்தில் நல்ல ஒழுக்கங்களை நாம் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் தீமையின் நிலைகளோ மிகவும் வலுபெற்றது.

நல்லதை எண்ணி நாம் செயல்படும் பொழுது அந்தத் தீமையின் நிலைகளை அறிகின்றோம். இருந்தாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுபெறுகின்றது.

நாம் வீடு கட்டி விடுகின்றோம். தூசி வருகின்றது. துடைக்காமல் விட்டால் என்ன செய்யும்…? தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

தரையில் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அதிலே அழுக்குப் பட்டால் பிசு…பிசு.. என்று ஒட்டுகின்றது. அந்த எண்ணெயில் கிரசினைப் (KEROSENE) போட்டுத் தேய்த்தவுடனே பிசு பிசுப்பான எண்ணெய்களை எல்லாம் நீக்கிவிடுகின்றது.

1.அப்போது எண்ணெய் கொட்டி விட்டது நான் கூட்டினேன்.
2.மீண்டும் அழுக்கு அதிலே ஒட்டுகின்றது… என்று
3.அப்படியே விட்டு கொண்டே இருக்கின்றோமா…?
4.அதற்குத் தக்க உபாயத்தைக் கூட்டி நாம் இதைத் துடைக்கின்றோம் அல்லவா…!

இதைப்போல வாழ்க்கையில் எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் “ஒட்டிக் கொள்கின்றது….!” அதை நாம் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்துவதற்குண்டான சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நினைவு கொண்டு எடுத்துப் பழக வேண்டும். உங்களை அறியாது ஏதாவது வந்தாலும் கூட உங்களைக் காத்துக் கொள்ள உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா ஜெபம் இருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். அதை எனக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் நீங்கள் எந்த நல்லதையெல்லாம் செய்கின்றீர்களோ அது நல்லபடியாக ஆக வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன். (நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஜெபம் இருக்கின்றேன்)

ஒரு டி.வி. நிலையத்தில் ஒளிபரப்பு செய்கிறார்கள் என்றால் அதே ஸ்டேசனைத் திருப்பி வைக்கும் போது அதை நாம் வீட்டிலிருந்து பார்க்க முடிகின்றது. அதைப் போன்று தான்
1.“ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை நினைக்கும் போதெல்லாம்
2.உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அலைத் தொடர்பு கிடைத்து
3.அந்தச் சக்தி வாய்ந்த உணர்வலைகள் கிடைக்கும்.

ஆகவே அருள் உணர்வுகளை நீங்கள் வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் நிறைய இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இது ஒன்றும் கஷ்டமில்லை. உங்களால் வளர்க்க முடியும்.

Leave a Reply