
“தேவர்கள் அசுரர்கள் – பாசிட்டிவ் நெகட்டிவ்” எதிர் நிலையான இயக்கத்தின் சூட்சமம் வியாசகர் சொன்னது
ஆரம்பத்தில் ஓர் உயிரணு ஓர் தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு தான் உடல் பெறுகின்றது.
அப்படி உடல் பெற்றாலும் மற்றொரு தாவர இனச் சத்தை நுகரப்படும் போது இந்த உயிரணுவிற்குள் (உடலுக்குள்) போராட்டமாகி இந்த உணர்வின் நிலைகள் மாறுபட்டு விடுகின்றது. அப்பொழுது
1.அந்தத் தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயக்கமாகத்
2.தன்னைக் காத்திடும் உணர்வுகள் இணைந்து
3.அது புது உணர்வின் தன்மையாக உருவாகின்றது.
ஒரு உயிரணு மற்ற தாவர இனங்களை நுகரும்போது அதனால் ஏற்பட்ட போர் முறைகள் தனக்குள் நோயாக விளைகின்றது.
நோயாக விளைந்தாலும் இரண்டறக் கலந்து அது உணர்வின் ஞானமாக விளைந்து அது உடலுக்குள் இணைந்தபின் முதலிலே எடுத்துக் கொண்ட உணர்வின் தசைகள் மாறுகின்றது.
அந்தத் தசைகள் உருமாறும் தன்மையில் அதற்குள் இணைந்த உணர்வின் மணங்கள் (புது) எண்ணமாகி அது எவ்வாறு இணைந்து கொண்டது என்ற நிலையை வியாசக பகவான் நான்காயிரம் ஆண்டுகளுக்குள் தெளிவுபடுத்தியுள்ளார்,
அன்று எழுத்தறிவு கிடையாது. ஆனால் அவர் சந்தர்ப்பம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட உண்மைகளை தனக்குள் நுகர்ந்தறிந்து வெளிப்படுத்தினார்.
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற்கடலில் கடையும் போது கடைந்தவற்றில்
1.தான் விழுங்கியது அனைத்தும் தேவர்கள் என்றும்
2.மலமாகக் கழித்ததை அசுரர்கள் என்றும் காட்டினார்.
ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொள்ளும் பொழுது உட்கொண்டது அனைத்தும் உடலுக்குள் உருப்பெறும் சக்தியாகவும் அதிலே கலந்து மனிதனாக உருவானபின் கழிவின் சத்தையெல்லாம் மலமாகவும் வெளிப்படுத்துகின்றோம்.
அந்தக் கழிவு நஞ்சின் தன்மை கொண்டது என்றும் அந்த நஞ்சினை உணவாக விழுங்கியது அனைத்தும் நஞ்சு கொண்டதாக மற்றொன்றை அழித்திடும் நிலையாக வருகின்றது என்றும் தெளிவாக உணர்த்தியுள்ளார் வியாசகர்.
உட் கொண்ட நிலைகளில் கழிவுகளை அகற்றும் போது அந்தத் தீமைகளை அகற்றி வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலைகளை வளர்த்து அதனின் நிலைகள் வளர்ச்சி ஆகின்றது.
இதைத்தான் அசுரர்கள் தேவர்கள் என்றும் நெகட்டிவ் பாசிட்டிவ் என்று காட்டினார். ஒரு இயக்கத்தின் தன்மை வேண்டும் என்றால் “எதிர் நிலை… மறைகள்” இருந்தால் தான் இயக்கும்.
இதைப் போல தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர் நிலையானால் தான் நம் உடலிலுள்ள அணுக்களும் இயங்கும். ஆனால்
1.எதிர் நிலையான உணர்வின் தன்மைகள் அதிகரித்து விட்டால்
2.நல் நிலையின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.நல் நிலையான உணர்வின் தன்மைகள் எதிர் நிலையாக ஓங்கி வளர்ந்தால்
4.தீமைகளை அது ஒடுக்கி விடுகின்றது.
உதாரணமாக காரத்தை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர் அனைத்தும் காணாது போய் விடுகின்றது.
ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்தால் உமிழ் நீரை நன்கு சுரக்கச் செய்து உணவை தாராளமாக உட்கொள்ளச் செய்கின்றது. உமிழ் நீர் சுவை மிக்கதாக மாறுகின்றது.
இதைப்போன்று தான் தீமைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது. தீமை சிறிதாக இருக்கும்போது நன்மைகள் பலவாக இருந்தால் ஒரு நொடியில் அமிழ்த்தி விடும்.
நஞ்சினை வென்று தீமைகளை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வுகள் மிக சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே நமக்கு முன் உண்டு.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியான அணுக்களை ஒவ்வொரு உயிராத்மாவும் பருகும் நிலைகளுக்குத்தான் “தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்…!” என்ற தத்துவத்தை அந்த மெய் ஞானியான வியாசகர் வெளிப்படுத்தினார்.
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அவர் சொன்ன தத்துவத்தின் உண்மை நிலை.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.