
கடலில் எது கலந்தாலும் அதை உப்பு நீராக மாற்றுவது போல் “ஞானிகளின் ஒளிக்கடலில் நாம் கலந்து…” எல்லாவற்றையும் ஒளியாக்க வேண்டும்
நெற் பயிரை வயலில் விளைய வைத்து அதைக் குவியலாக்கும்போது எல்லோரும் உணவாக உட்கொள்ள முடிகின்றது.
அதே போலத் தான் ஞானிகளின் உணர்வுகளைக் குவியலாகக் குவித்தால் தான் எல்லோரும் நாம் அவரவர்களுக்குத் தேவையான பங்கை எடுத்துக் கொள்ள முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் ஞான வித்தை எனக்கு (ஞானகுரு) ஒரு நெல்லாகக் கொடுத்தார் குருநாதர்.
அதைப் பல நெல்லாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.
யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லாருடைய உணர்வுகளிலும் அந்த வித்தைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம்.
பதிய வைத்தை ஞானிகளின் உணர்வுகளை நாம் எல்லாம் சேர்த்து விளைய வைத்தால் தான் ஒரு குவியலாக வரும்.
ஏனென்றால் ஒரு நெல் யாருக்கும் பசியை தீர்க்காது. என் ஒருவனால் அது செய்ய முடியாது.
எல்லோரும் சேர்த்து ஞானிகளின் அருளாற்றல்களை விளைய வைத்துப் பெரிய குவியலாக வரப்படும் பொழுது தான் அதை மொத்தமாகப் போட்டுச் சமைத்து எல்லாருடைய பசியையும் தீர்க்க முடியும்.
இதைக் கேட்டுணர்ந்தவர்கள் அனைவரும் தீமையை நீக்கும் “கல்கி…” என்ற நிலையில் பத்தாவது நிலையான ஒளியின் சரீரம் பெறும் அந்த நிலையை அடைவீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து
2.உங்கள் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு துன்ப நிலைகளிலிருந்தும்
3.உங்களை மீட்கச் செய்வதற்கே இந்த உபதேசம்.
4.மெய் ஒளியை வளர்த்து தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளுங்கள்.
இந்த மெய் உணர்வுகளைக் கேட்டு வளர்த்துக் கொண்டவர்கள் உங்கள் ஊர்களில் உள்ள மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி அவர்களையும் மீட்கச் செய்ய வேண்டும்.
ஞானிகளின் ஆற்றலைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அவர்கள் அறியாது வந்த இருளை நீக்கும் நிலைகளை நாம் பெறச் செய்ய வேண்டும்.
நாம் வாழும் ஒவ்வொரு இடங்களிலும் ஞானிகளின் உணர்வுகளை நம் மூச்சலைகள் மூலமாக அதைப் படரச் செய்ய வேண்டும்.
அப்படிப் படர்ந்தால் தான் நச்சுத் தன்மைகளிலிருந்து மனிதன் ஒவ்வொரு மனிதரும் விடுபடும் நிலைகளைப் பெருகச் செய்ய முடியும்.
கடல் பெரிதாக இருக்கின்றது.
1.அதில் எது கலந்தாலும் கடைசியில் “உப்பு நீராக” மாற்றிவிடுகின்றது.
2.அதாவது நல்ல தண்ணீரோ அசுத்த நீரோ சாக்கடைத் தண்ணீரோ எதுவாக இருந்தாலும்
3.அந்தக் கடலுக்குள் சேர்ந்த பின் உப்பின் நிலைக்கே அதை மாற்றி விடுகின்றது.
இதை போல தான் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் அந்த மெய் உணர்வின் கடலிலே ஒளிக்கடலான அந்த ஞானிகளின் உணர்வுடன் தான் சங்கமமாக வேண்டும்.
1.வாழ்க்கையில் வரக்கூடிய அசுத்தங்களோ
2.தவறான நிலைகளைக் கேட்டுணரந்தாலோ
3.உலகில் எங்கெங்கோ நடக்கும் தவறுகளைக் கேட்டு நுகர்ந்தாலோ
4.அதைப் பார்த்தாலோ அதைப் பற்றிப் பேசுவதைக் கேட்டாலோ
5.இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் போய்
6.நம் உடல் என்ற பெரும் கடலுக்குள் உப்பாக மாற்றி
7.அதனின் (தீமையின்) செயலுக்கே நம்மை மாற்றிவிடுகிறது.
ஆனால் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் அனைவரும் சேர்ந்து
1.மீண்டும் மீண்டும் குவியலாகக் கவரப்படும் பொழுது
2.நமக்குள் அது பெருகி நம்மை ஞானியாக மாற்றி
3.மெய் ஒளிக்குள் – மகரிஷிகளின் அருள் வட்டமான அந்த எல்லைக்குள் நம்மை அழைத்துச் சென்று விடும்.
4.அந்தப் பெரும் கடலான ஒளிக் கடலில் கலக்கும் நிலையை
5.நாம் இன்றிலிருந்தே இப்பொழுதிலிருந்தே செய்ய வேண்டும்.
இதைக் கேட்டுணர்ந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி சொல்லுக்குள் இனிமை பெற்று மெய் ஒளி காணுங்கள்.
அதே போன்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்கள் அவர்கள் இருள்கள் நீங்கி மெய் ஒளி காணும் சக்தியாக அவர்களுக்குள்ளும் விளையச் செய்ய வேண்டும்.
ஞானிகளின் உணர்வுகளை எல்லோருக்குள்ளும் விளைவிக்கும் திறன் நீங்கள் பெறவேண்டும் என்ற நிலைகளுக்குத்தான் இதைச் சொல்கிறோம்.
உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.