“நல்லது நடக்க வேண்டும்” என்றால் நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்…?

Divine Guru Master

“நல்லது நடக்க வேண்டும்” என்றால் நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்..?

ஒருவனுடைய நிலைகளில் தீமை விளைகிறதென்றால் அது “மெய்”. அந்தத் தீமையின் உணர்வுகளை நுகர்ந்ததனால் தீமையின் செயலாக இயக்குகின்றது.

ஆனால் தீமையை அகற்றும் நிலையாக அவனுக்குள் எதை இணைக்கின்றோமோ அந்தத் தீமையை அகன்றபின் எதை இணைத்தோமோ அது இயக்குகின்றது.

இது மெய். இந்த மெய்யை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை. பிறருடைய செயல்கள் நம்மை இயக்குகின்றது.

நாம் மெய்யைக் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஆர்வத்தில் இருக்கும் போது
1.ஒருவன் சிறு தவறு செய்தால்
2.இங்கே நமது எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
3.ஆனால் தவறை நீக்க வேண்டும் என்று முதலில் நாம் பிரயத்தனம் (முயற்சி) எடுத்தால் “நீக்கும் உபாயம்…” கிடைக்கும்.

நீக்கும் உபாயம் நமக்குள் கிடைத்தவுடன், “அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள்”என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.இதை ஓங்கி வளர்த்துக் கொண்டு
2.அவனுக்காக வேண்டி எண்ணி
3.நமக்குள் வரும் பிறிதொருவரின் உணர்வினைத் தணிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று இதை நமக்குள் திணித்துவிட்டால் “அவன் செய்த தவறு… நமக்குள் வளராது”.

இல்லையென்றால் “இத்தனை பேர் சொல்கிறார்களே… கேட்க மாட்டேன் என்கிறானே…”என்ற இந்த உணர்வுகள் இங்கே வளரும்.
1.நமக்குள் அந்த எண்ணம் வளராது
2.நம் எண்ணம் அவன் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஆகவே “குருவின் வேலை என்ன…?” என்று கேட்டீர்களானால் உங்களுக்கு அந்த நல்லதைப் பெறச் செய்யும் காலத்தை ஏற்படுத்த வேண்டும்.

உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வுக்குத் தக்கவாறு பதிவு செய்கிறோம். அதற்குத்தான் இந்த நிலைகளில் உபதேசிக்கிறோம்.

யாம் உங்களிடம் சாதாரண நிலைகளில்தான் இருக்கிறோம். காரணம் உங்களுடன் ஒன்றியிருந்தால்தான் நீங்கள் இதைக் கேட்பீர்கள்.

யாம் கொஞ்சம் ஜபர்தஸ்து பண்ணிக் கொண்டிருந்தால் பக்கத்தில் வரப் பயம் வரும். சொல்வதன் உண்மை நிலைகளை இதுவே தடைப்படுத்திவிடும். உங்களை அறியவிடாமல் செய்யும்.
1.எம்மை உயர்த்திக் கொண்டிருப்பீர்கள்.
2.உங்களைத் தாழ்த்திக் கொண்டேதான் இருப்பீர்கள்.
3.சொல்வது அர்த்தமாகிறதல்லவா?

ஆகையினாலேதான் உங்களை அணுகி வருகிறோம்.

எமது குருநாதர் பித்தனைப் போல இருந்தார். “இப்படி இருக்கிறாரே…, என்ன சொல்லப் போகிறார்…?” என்று யாம் அவரை அறிய ஆரம்பிக்கின்றோம்.

இதைப் போலத்தான் எம்மை அணுகி வரப்படும்போது அந்தப் பற்றே வரும். எமது மேலே பற்று வரவில்லை என்று சொன்னால் இதை எடுக்க முடியாது. உண்மையான பற்று அங்கே வரவேண்டும்.

எனவே உண்மையான பற்றை உங்களிடம் ஏற்படுத்தச் செய்கிறோம். என்னைப் போற்ற வேண்டுமென்றால் ஜபர்தஸ்துதான் வரும்.

உண்மையான இயக்கம் எதன் வழியில் எதைப் பெற்றது? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை “இந்தச் சாமி இப்படி இருந்தார்… அந்தச் சாமி இப்படி இருந்தார்…” என்று எத்தனையோ பேர் சொல்வார்கள்.

இது எந்தெந்த வழிகள்…? என்ற ஞானம் உங்களுக்கு வரும்.

இந்த ஞானம் வரத்தொடங்கி விட்டாலே மெய்ஞானம் உங்களுக்குள் தன்னாலே வளரும்.

யாம் உபதேசித்த உணர்வைப் பதிவாக்கிக் கொண்டவர்கள் எந்தக் காவியத்தைப் படித்தாலும்
1.அதைப் “பிளந்து”
2.அதிலிருக்கும் உண்மையை உணரும் தன்மையே வரும். இது வர வேண்டும்.
3.இல்லையென்றால் அந்த மெய்ஞானம் வராது.

“மெய்ஞானம்…” எல்லோரும் பெறவேண்டும். எல்லோரும்  “மெய்ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்” என்பதற்கே இதை உபதேசிக்கின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply