
மந்திரம் சொல்பவர்கள் அவசியம் தெரிய வேண்டிய முக்கியமானது…!
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல மந்திரங்களைக் கற்றுணர்ந்தவர்.
1.மந்திரத்தின் உண்மைகளையும் அறிந்தார்.
2.மந்திரத்திற்குள் இருக்கும் உட்பொருளை அறிந்தார்.
3.மெய்ப்பொருளைக் காணும் நிலையில் தன் எண்ணத்தைச் செலுத்தினார்.
4.மெய்ப்பொருளை அடைந்தார்.
தன் வாழ்க்கையில் மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஆகும்…? என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார்.
1.யார் யார் எந்தெந்த மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டார்களோ
2.அதே மந்திரத்தைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது
3.அந்த மந்திரத்தைப் பதிவு செய்தவரின் உணர்வுகள்
4.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின் (இறந்தபின்) அந்த ஆன்மா மந்திரம் சொல்பவர் உடலுக்குள் வருகின்றது.
5.இந்த மனிதனின் உடலுக்குத்தான் இது பயன்படுத்த முடியும் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.
6ஆகவே இதைப் போல மந்திரங்களை எவர் சொன்னாலும் அதை நீ பதிவு செய்யாதே.
அந்த மந்திரங்களை மற்றவர்கள் சொல்வதை நீ கேட்டறிந்தாலும் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று மெய் ஒளியின் உணர்வை வைத்துத் துடைத்துக் கொள்.
கேட்டு… இரசித்து… “மந்திரம் தானே…!” என்ற நிலைகள் நீ கேட்டறிந்தாலும் அது உனக்குள் பதிவாகிவிடுகின்றது.
பதிவான பின் அதை நீ நுகர நேரும். இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த “மந்திர ஒலிகளிலே” நம் உயிரான்மா அது இயக்கப்பட்டுவிடும்.., சிக்கிவிடும்.
ஆகையினால் எந்த மந்திர ஒலிகளை ஒருவர் சொன்னாலும் அதை அழித்திட “ஓ…ம் ஈஸ்வரா” என்று உயிரை வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி அந்த உணர்வின் ஆற்றலை உன் உடலுக்குள் சேர்த்துக் கொள்.
நம் உடலை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ துணியில் இருக்கும் அழுக்கை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல் நம் ஆன்மாவிற்குள் பட்ட இந்த உணர்வின் தன்மையைத் துடைக்க வேண்டும் என்றார் குருநாதர்.
இதே மாதிரித்தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் தீமைகள் எதைக் கண்டாலும் வெறுக்கும் நிலைகளுக்கு ஆகி பதிலுக்கு வெறுத்திடும் செயலாக நம்மையும் செயல்படுத்தச் செய்கின்றது.
ஏனென்றால் நாம் கொடுப்பதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அவையெல்லாம் அழுக்காகச் சேர்ந்து நம் நல்ல உணர்வினை இயக்காது தீமையான உணர்வுகளாக நம் உடலுக்குள் ஜீவன் பெற்றுவிடுகின்றது.
ஆக நல்லதைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் இத்தகைய தீமைகளை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு “விண்ணை நோக்கி ஏகு” என்றார் குருநாதர்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானித்து தீமை செய்யும் உணர்வின் தன்மையைத் துடைத்துவிடு என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.



