
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை “உணவாக உட்கொள்ளும்…, அணுக்களை” நமக்குள் உருவாக்க வேண்டும்
துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது. அதை நம் பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் (பூமிக்குள்) பரவச் செய்கின்றது.
அப்பொழுது நம் நினைவுகள் அனைத்தும் எங்கே இருக்க வேண்டும்?
நம்முடைய நினைவுகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று துருவத்தின் வழி ஏங்கி இருக்க வேண்டும்.
இவ்வாறு நாம் ஏங்கிப் பெறும் பொழுது நாம் சுவாசித்த உணர்வுகள் நம் “இரத்த நாளங்களிலே” கலக்கின்றது.
அதைத் திரும்பத் திரும்ப நாம் எண்ணும் பொழுது அது அணுக்கருவாகின்றது.
பின் முட்டையாக வளரத் தொடங்குகின்றது.
நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் பொழுது அந்த முட்டை வெடித்து அணுவாக உருப்பெறுகின்றது.
எந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் தியானித்தோமோ அது அணுத் தன்மை அடைந்தபின் எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலைக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது.
- திரும்பத் திரும்ப எண்ணினால் அணுவின் “கருவாகும்”
- பின் “முட்டையாகும்”
- முட்டை வெடித்து “அணுவாகும்”
- அணுவானால் “உணவை” உட்கொள்ளத் தொடங்கும்
அப்பொழுது நம் சிறு மூளை பாகம் அது உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண், காது, மூக்கு, வாய், உடம்பு என்ற இந்த உணர்வுகளில் வெளிப்படுத்தி எந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து நம் பூமிக்குள் பரவியதோ அதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
அந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகரும்போது “உமிழ்நீராக மாறி.., இரத்தமாக மாற்றி..,” அது உடனடியாகவே சேர்த்து உடலிலுள்ள அணுக்களுக்கு இதை இப்படி மாற்றியமைக்க வேண்டும்.
அப்பொழுது நம் உடலுக்குள் ஒளி பெறும் சரீரமாக அந்த அணுக்கள் நம் உடலிலே வளரும்.
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் உயிரைப் போன்று தன் உணர்வின் அணுக்களை அது ஒவ்வொன்றையும் ஒளியாக எப்படி மாற்றினானோ அதைப் போல நாம் நம் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்ற முடியும்.
நம் உடலில் அத்தகைய அணுக்கள் உருப்பெற்றால் தான் ஒளியாக வளர்க்க முடியும். ஆனால், அணுக்கள் நமக்குள் உருப்பெற்றுவிட்டாலோ தன் பசிக்குத் தன்னிச்சையாக அது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை எடுக்கத் தொடங்கும்.
அந்த “அகஸ்தியாமாமகரிஷிகள்” சென்ற எல்லையை அடைய இது மிகவும் எளிதானது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.