ஏமாற்றுபவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்காதீர்கள்…!
இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆக, ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.
இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது”. கஷ்டம் அதிகமாகின்றது.., ஆனால் ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.
நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்.., நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.
கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்.., “என்ன கொட்டும்?” தரித்திரத்தைத்தான் கொட்டும். செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.
ஏனென்றால், தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.
ஜாதகமோ, மந்திர தந்திரம் செய்பவர்களையோ, மற்றவைகளையோ பார்த்தபின் உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்.., அது அப்படி வரும்.., இப்படி வரும்” என்று சொல்லியபின்.., அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.
வெள்ளாமை வருமா.., பார்க்கலாம்..!
இதுவெல்லாம் என்ன என்றால்.., நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.
ஆக, அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே..,” என்று வேதனை தான் வரும்.
வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்.., “அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.
நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க.., உங்கள் எண்ணம்” அது உதவும்.
நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை…, “மெய்ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு செய்கின்றோம்.., அவ்வளவு தான்…!
ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்துவிட்டால் அது என்ன செய்கின்றது?
அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து.., மள.., மள..,” என்று வளரத் தொடங்குகின்றது.
அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ, மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டுவிட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான், உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்?
“கஷ்டம் வரும் பொழுது.., அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்”. அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.
பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய்ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.
அப்படி ஊன்றி இருக்கும் பொழுது.., “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.
அது போதும்.
இப்படிச் செய்து கொண்டே வந்தோம் என்றால் உங்கள் உடலில் “ஊழ்வினை என்ற வித்து” வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். உங்களுக்குள் அந்தப் பலன் கிடைக்கும்.
வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடக்கூடிய ஞானம் தன்னாலே வரும். மன பலமும் மன தைரியமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.