அகஸ்தியன் தன் இன மக்கள் பெறவேண்டும் வெளிப்படுத்தியதை நாம் தியானத்தில் நுகர்தல் வேண்டும்

Sage Agastiya

அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று “உணர்வாக… மூச்சலைகளாக வெளிப்படுத்தியதை…” நாம் நுகர்தல் வேண்டும்

மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.

விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.

“ஒலி.., ஒளி..,” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.

கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.

“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,

இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து..,” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.

இப்படித்தான்… “அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை..” சொல் என்ற நிலைகள் வராதபடி.. “உணர்வென்ற நிலையில்” தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெறவேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக…!” வெளியிட்டுள்ளான்.

அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.

அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான்.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்.., “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல.., நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல.., என்பதை நாம் உணர்தல் வேண்டும்

நாம் சொந்தமாக்கப்பட வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழவேண்டும்.., என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.

உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெறவேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.

பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால், குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.

இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.

ஆனால், மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும், கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது?

நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.

குருநாதர் எம்மை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தரோ அதே போன்றுதான் “உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம்”.

  1. உலகில் இன்று நடக்கும் தீமையின் உணர்வுகளும்..,
  2. அதை நீக்கிடும் அருள் உணர்வுகள் பெற்றதையும் இணைத்து..
  3. இரண்டையும் கலக்கப்படும் பொழுது இணைத்து..,

“தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகள்.., உங்களுக்குள் வலுப்பெறவேண்டும்” என்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றோம்.

அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம். எமது அருளாசிகள்.

 

Leave a Reply