ஞானக் கதவு…

mystical-door

ஞானக் கதவு…

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

  1. என் குடும்பத்தில் கஷ்டம்,..,
  2. என் குடும்பத்தில் தொல்லை..,
  3. என் குடும்பத்தில் சண்டை..,
  4. என் பையனின் நிலைகள் இப்படி..,
  5. நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்..,
  6. அவன் தரவே முடியாது என்கிறான்..,
  7. என் உடல் நிலை சரியில்லை..,
  8. என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்

என்று இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ.., “அது அது..,” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது.., “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெறமுடியாதபடி.., தடைப்படுத்திக் கொண்டிருக்கும்”.

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

ஆக, அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்.., “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே.., அதை அடக்கிடும் சக்தி” பெறவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ.., எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகையை தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி.., கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து..,” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.., இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை..,” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்.., அறியும்.., சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்.., “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்.., அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்.., படிக்கும்பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு.., உங்களுக்கு வேண்டும்.

ஆனால், “கதவை அடைத்துவிட்டால்..,! என்ன செய்யும்? யாம் உணவைக் கொடுத்தால் அதை நீங்கள் உட்கொண்டால் தானே உங்களுக்குள் அது சத்தாக மாறும்.

யாம் பதிவு செய்யும் அந்த ஞான வித்துக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உரமாக ஏற்றுங்கள்.

தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி அவர்கள் அருளால் குரு அருள் பெற்று குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறுங்கள்.

அதனின் துணை கொண்டு தீமைகளை ஒடுங்கச் செய்யுங்கள். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருளாற்றல் பெறுங்கள். உங்கள் பார்வை எண்ணம் சொல் செயல் அனைத்தும் புனிதம் பெறும்.

Leave a Reply