இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

last thought

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு காந்த சக்தி கொண்ட கண்ணாடியை (TELESCOPE) உருவாக்குகின்றார்கள். அது வான்வீதியில் பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருப்பதையும் இழுத்துக் கவரும் சக்தி கொண்டதாக இருக்கின்றது.

அதை வைத்துக் கோள்களைப் படமாக்கி… கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் இணைக்கின்றார்கள்… நாடாக்களில் பதிவு செய்கின்றனர்… மேலும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கி எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

படமாக்கிய அந்தக் கோளின் உணர்வின் இயக்கம் எதுவோ அதனுடைய அடர்த்தி எது வருகின்றது…? என்று அளந்தறிந்து கொள்கின்றார்கள்.

அதன் நிலையை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட்டை விண்ணிலே வீசுகின்றார்கள்.
1.அதன் முகப்பிலே… அந்தக் கோளின் நிலையை எலெக்ட்ரானிக்காக மாற்றி
2.இராக்கெட் போகும் பாதையில் எதனுடைய உணர்வுகள் இங்கே இருந்ததோ
3.அதன் பாதை கொண்டு அதன் அளவிலே எடுத்துச் சென்று அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கின்றது.

ஏனென்றால் அதே கோளினுடைய உணர்வுகள் பட்ட பின் அது அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறது.

அப்பொழுது அங்கிருக்கும் உணர்வுகளை இதிலே கவர்ந்து… எதன் அழுத்தத்தின் தன்மைகள் அங்கே மாறுபடுகின்றது…? என்பதைப் பலவிதமாக இதே எலெக்ட்ரானிக்கை வைத்து அங்கே பதிவாக்கிக் கொள்கின்றனர்.

1.பதிவாக்கிய அலைகளை அங்கிருந்து ஒலி பரப்பு செய்யப்படும் பொழுது
2.இதன் தொடர்புடைய அதே இங்கே பூமியிலிருந்து பதிவாக்கி
3.அதன் அளவுகோலை அளந்து… அந்தப் பாதையை அளந்து… அந்தக் கோளின் தன்மையை அளந்து..
4.எந்தெந்தக் காலங்களில் அது எப்படி எல்லாம் செல்கிறது…? என்று விஞ்ஞானிகள் தரையிலிருந்து காண்கின்றார்கள்.

இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாக்கப்படும் பொழுது
2.நம் நினைவு கடைசியில் அதிலே வந்தால் போதும்….!
3.வந்த பின் அந்தத் துருவ நடத்திரத்தின் நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம்.

உயிர் நம்மை அங்கே இந்த உணர்வுடன் அழைத்துச் சென்று அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பின்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

ஏனென்றால் வலுக் கொண்ட உணர்வு கொண்டு இப்படிக் கரைத்துக் கொண்ட பின் காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளை எடுத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

இப்படித்தான் கரைக்கும்படி நம்முடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கே கங்கையிலோ அல்லது ஓடுகின்ற ஆற்றிலோ மற்றதிலோ கரைத்தால் என்ன செய்யப் போகின்றோம்..?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உதாரணமாக இந்த வாழ்க்கையில் ஒருவருடன் அதிகமாகப் பழகுகின்றோம் என்றால் அந்த மனிதனின் உணர்வைப் பதிவாக்கி உடலுக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பவசத்தால் அவர் நோய்வாய்ப்பட்டால் பாசத்துடன் அவரை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகள் இங்கேயும் பதிவாகின்றது.

1.அதே சமயத்தில் இந்த உடலை விட்டு அவர் பிரிந்து சென்றால்
2.அவர் உணர்வை யார் அதிகமாக உடலுக்குள் வளர்த்திருக்கின்றனரோ
2.அந்த உடலுக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

பின் அந்த உடலுக்குள் சென்று அதே நோயின் உணர்வை அங்கேயும் உருவாக்கி விடுகின்றது. உடலுக்குள் இப்படிப் போகும் ஆன்மாவை
1.வெறும் மந்திரத்தைச் சொல்லியோ மாயத்தைச் சொல்லியோ
2.பாவத்தைப் போக்கி விட்டு மோட்சத்திற்கு அனுப்புவது என்றால்…. எங்கே…?

இவருடைய உணர்வுகள் விளைந்தது எதுவோ இன்னொரு உடலுக்குள் சமமாக அது ஒத்துக் கொண்டால் தன்னை அறியாமலே இந்த உணர்வின் துணை கொண்டு அந்த நோய்கள் அங்கேயும் வருகின்றது. புகுந்த உடலையும் வீழ்த்துகின்றது.

இப்படி.. புகுந்த உடலிலும் அந்த விஷத்தின் தன்மை வளர்ச்சி அடையச் செய்து அதை வீழ்த்திவிட்டு வெளியே வந்து விடுகின்றது. அடுத்து மனிதனல்லாத உடலைத் தான் பெற முடியும்.

அதே போல் வீழ்த்தப்பட்ட அந்த உடலோ அவர் மீது யார் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் அது சென்று விடுகின்றது.
1.இப்படி… மனிதர்கள் நாம் மீண்டும் மீண்டும் தேய்பிறை என்ற நிலைகளில் தான் வருகின்றோமே தவிர
2.வளர்பிறை என்ற நிலைக்குச் செல்லவே இல்லை.

ஆகவே மனிதனுக்குப் பின் நம்முடைய நிலை எது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் அதிகாலையில் குளித்தாலும் சரி குளிக்கா விட்டாலும் சரி…! ஏனென்றால் குளிப்பது மேலே தான்…! ஆனால்
1.நம் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து
2.அருள் ஞானத்தைப் பெற்றுத் தீமைகளை அகற்ற…
3.நம் மனதைச் சுத்தப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றோம். தீமையிலிருந்து மீண்டிடும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே வருகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்ய இது உதவும்.

இந்தக் குறுகிய மனித வாழ்க்கையில் 120 வருடம் வரை கூட சிலர் வாழ்கின்றார்கள். இருந்தாலும் அந்த 120 வருடம் வாழ்வதற்கு முன் எதைச் சேமித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்றால்
1.அங்கே அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று
2.என்றுமே தீமைகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply