துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

Polaris and earth

துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

 

நீங்கள் எந்த நிமிடம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டுமென்று “ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்றுகின்றீர்களோ அப்பொழுது நீங்கள் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
1.அதை விரையமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
2.அதற்குத்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஆழப்பதிவு செய்வது.
3.நீங்கள் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

உங்கள் சொல் பேச்சு பார்வை உங்கள் மூச்சலைகள் இந்தக் காற்றிலே பரவினாலும் நீங்கள் யாருக்குப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சினாலும் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது தன் இனத்தின் செடி பெருகி விட்டால் குவிந்த சக்தி கொண்டு அந்தத் தாவர இனங்கள் செழிப்பாக வளரும். களைகள் முளைத்து விட்டால் அந்த நிலையில் வளர்வதில்லை.

அதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.நாம் யாரைப் பார்த்தாலும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அந்த உணர்வின் சக்தி நமக்குள் வருகின்றது.

நம் உணர்வுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணைக்கச் செய்து நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் உங்கள் சக்தியை அவர்களுக்குப் பரப்பி அவர்களைச் சந்திப்போர் எல்லாம் அதைப் பெறச் செய்ய வேண்டும்.
1.நாம் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி
2.எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்.

சூரியன் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை எடுத்தாலும் அந்த விஷத்தைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது. அதில் விளைந்த மகாஞானி உலகில் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவானாலும் அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

இந்த மனித உடலில் அவர்கள் பின்பற்றிய அந்த உணர்வைச் சேர்த்தால்தான் என்றும் ஒளியின் சுடராக நிலைக்க முடியும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply