
“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்
அகஸ்தியன் துருவனாகித் துருவ் மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் ஒளியான அணுவைத்தான் நாரதன் என்று காட்டினார்கள். அதாவது ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது…!
2.விஷத்தின் தன்மை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு
3.விஷத்தையை ஒடுக்கும் நிலைகளைத்தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன்…! என்றும் அன்று ஞானிகள் பெயரை வைத்தார்கள்.
துருவ நட்சத்திரத்திலிருந்து அத்தகைய நிலைகளில் வெளிவரும் அந்த உணர்வை ஒருவன் நுகர்ந்தான் என்றால் மனித வாழ்க்கையில் அவன் ஆசையினுடைய நிலைகளைக் கலைத்து கலகப்பிரியனாக ஆக்கிவிடும்.
இந்த மனித வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளையும் தன்னை அறியாமல் ஆட்டிப்படைக்கும் செயல்களையும் நீக்கிவிட்டு அது தான் கலகப்பிரியன்…!” அந்தக் கலகமோ நன்மையிலே முடியும்.
உதாரணமாகத் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதிலே அறியாது சிறு தடை ஏற்படும் போது குழந்தை தவறு செய்து விட்டாலோ நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்றாலோ அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகின்றோம்.
வேதனை என்பது விஷம். அந்த விஷம் நமக்குள் வந்து கலக்கத்தை ஏற்படுத்தி நம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது. அவன் இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே…! என்று கோபமும் ஆத்திரமும் வேதனையும் படுவோம்.
அதே போல பிறருக்குத் தக்க நேரத்தில் எல்லா உதவியும் நான் செய்தேன். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் சரியான நேரத்திற்குக் கொடுக்கவில்லை என்றால் அவர்களை எண்ணி வேதனைப்படுகின்றோம். உதவி செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று ஏசிப் பேசுவதும் அடுத்து வேதனையும் படுவோம்.
இதைப்போன்று நாம் மனித வாழ்க்கையில் பற்றுடன் வாழும் பொழுது அந்தப் பாசத்திற்கு எதிர்நிலையாக வரும் போது அதுவே நமக்குள் அதிகக் கோபத்தையும் எல்லை கடந்த ஆத்திரத்தையும் ஊட்டிவிடுகின்றது.
நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் படும் துயரத்தைக் கேட்டு விபரத்தை அறிந்து கொள்ளும் பொழுது அதை உங்களை அறியாது நுகர்ந்து விடுகின்றீர்கள்.
அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!
1.இந்த நாரதன் என்ற உணர்வின் தன்மையை நாம் நுகரும் போது
2.நமக்குள் வரும் அத்தகைய தீமையான உணர்வுகளை எல்லாம் பிரித்து விட்டு
3.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக
4.எல்லாவற்றையும் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.
அதற்காக வேண்டித் தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அணுவின் தன்மைக்கு “ரிஷியின் மகன் நாரதன்” என்று பெயரிட்டு நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்வதற்காக அவ்வாறு வைத்தார்கள்.
உங்கள் நல்ல குணத்தை அழிக்கும் திறன் கொண்ட அத்தகைய வேதனையான உணர்வை அழித்திட்ட தனக்குள் அடக்கிய அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துப் பழக வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்து
3.மகரிஷிகளை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்திகளைப் பெறச் செய்வதற்காகவும்
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.
அந்த மகரிஷிகள் உணர்வுகளை நுகர்ந்தால் தீமைகளை மாற்றி நம் நல்ல பண்பினைக் காத்து பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக ஓங்கி வளர்த்துக் கொள்ள முடியும்.
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் என்றும் நிலையாக நம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.