நமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”

Soul cleansing

நமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”

 

வாழ்க்கையில் நம்மை அறியாமல்

1.எந்தெந்த உணர்வுகள் தீமைகளாக இயக்குகின்றதோ

2.அவை எல்லாவற்றிலும் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கலந்து கலந்து கலந்து

3.ஊழ்வினையாக ஞான வித்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின் அந்த மகரிஷிகளின் அருள்சக்தியால் என் தீமைகள் “விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்…! என்ற எண்ணங்களைச் செலுத்திப் பழக வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்தப் பேராற்றல் மிக்க சக்திகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து நம்முடைய எல்லா உணர்வுகளிலும் எல்லாக் குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் சேர்க்கின்றது.

ஏனென்றால் உடலில் ஏற்கனவே அறியாது சேர்ந்த தீமையான உணர்வுகளைக் குறைக்க இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

தீமை வரும் சமயம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்தாலும் முந்தைய பழைய பதிவின் ரெக்கார்ட் நம் உடலுக்குள் அணுக்களாக விளைந்திருக்கின்றது.

ஒரு ஒலி நாடாவில் ஏற்கனவே மற்றவைகளைப் பாடிப் பதிவாக்கியிருப்பார்கள். அப்படிப் பாடிய பாடலை அழிக்காமல் மீண்டும் அதிலே பதிவு செய்தால் அடுத்துப் பதிவாக்குவதை நாம் அர்த்தம் காண முடியாது…!

1.நாடாக்களின் முதலில் ஒன்றைப் பதிவு செய்திருந்தாலும்

2.அதில் மீண்டும் பதிவு செய்யும்போது

3.விஞ்ஞான அறிவு கொண்டு அந்தப் பதிவானதை அழித்து விட்டுத் தான்

4.மீண்டும் பதிவு செய்வார்கள்.

இதைப்போல நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே நமக்குள் பதிவான குணங்களைத் துடைக்க வேண்டும். துடைத்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் துடைக்க வேண்டும்.

ஒரு முறை துடைத்து… மீண்டும் அந்த எண்ணம் வந்தது என்றால்…! மீண்டும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று அதை மீண்டும் துடைக்க வேண்டும்.

“அதிலும் நினைவு குறைந்தால்… மீண்டும் மீண்டும் துடைத்து விட்டு…” யார் நம்மை ஏசினார்களோ தவறாக எண்ணினார்களோ மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்கவேண்டும்.

2.எங்கள் உணர்வுகள் அவரை நல்லதாக்கவேண்டும்.

3.எங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று

4.பிறரிடம் விளைந்த தீய வினைகள் நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

இதற்குப் பெயர் தான் விநாயகர் சதுர்த்தி.

அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் கலக்கச் செய்வதே “ஆத்ம சுத்தியின் மூலக் கூறு…!”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply