மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி

மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் எடுத்தேன்… ஆனால் மீண்டும் வரவில்லை என்று எண்ண வேண்டாம்.

துணிகளில் அழுக்குப் பிடித்து விட்டது என்றால் சோப்பைப் போட்டு அதை நீக்குகின்றோம். அதைப் போல் ஒரு பொருளைச் செய்யும் போது சரியாக வரவில்லை என்றால் அதைச் சீர்படுத்துகின்றோம்.

உதாரணமாக ஒரு உலோகத்தை உருக்கிக் கொண்டு வரும் பொழுது சரியாக அது வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றான் மனிதன்.

இதைப் போலத் தான்
1.அந்த மெய் ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்து ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு உடலுக்குள் செலுத்தி
2.அதைச் சீராக வளர்த்திடும் அந்த எண்ண வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் கூட்டுத் தியானங்களை ஏற்படுத்துகின்றோம். அதன் வலு கொண்டு எண்ணிக் “காற்றிலிருந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகுவதற்கு ஆத்ம சுத்தி…”

தையல் கலையைக் கற்றுக் கொள்கின்றார்கள். அப்படிக் கற்றுக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் பேசிக் கொண்டே சீராகத் தைக்கின்றார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ள நாம் அதைக் கூர்ந்து கவனித்தாலும் நம்மால் நேராகத் தைக்க முடியாது.

ஆனால்…
1.நம்முடைய கூர்மையான உணர்வை அதற்குள் செலுத்தி
2.அது சீராக வைக்கும்படி நம் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
3.அந்த வேலை செய்யும் எண்ணமே அதைச் சீராக நம்மைச் செயல்படுத்தும்படி செய்துவிடும்.

உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் பிளாஸ்டிக் வயர்களை வைத்துப் பின்னிப் பழகுகின்றார்கள். அந்த உணர்வின் இயக்கமே அளவுகோலைக் குறித்து…
1.கண் தெரிந்தவர்கள் நாம் அதைப் பின்னுவதைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் பழகி அழகாகக் கலரையும் இணைக்கின்றார்கள்… பின்னலையும் தெளிவாக உருவாக்குகின்றார்கள்.

கண்ணற்றவன் தடவிப் பார்த்துக் கலரைப் பார்க்கின்றான்.

இதைப் போல நமது உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கிப் பெருக்கிக் கொள்வதற்குத் தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கிறோம்.

உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் பொழுது அதைப் பாய்ச்சி ஜீவன் பெறச் செய்து அந்தச் சக்தியை வளர்த்து விடுகின்றது.

ஒவ்வொரு நொடியிலும்
1.உங்களுக்குள் குறை உணர்வோ அல்லது பலவீனமான எண்ணங்களோ வந்தால் அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம சுத்தி செய்து
3.உங்களுக்குள் இணைந்த தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வது தான் ஆத்ம சுத்தி.

இதுதான் உண்மையான தியானம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply