
அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்
ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று. நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது. அவன் அமைத்த கோட்டை இந்த உடல். இந்தக் கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
1.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.
2.“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா” என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலி ஒளி என்ற நிலையில் உயிர் என்று ஆகின்றது.
3.“நீயே தான் நான்… நானே தான் நீ…!” என்று உயிரோடு ஒன்றி ஒளியென்ற நிலை நாம் என்றும் பெற்றிடுவோம்.
இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனாகி உள்ளோம்.
இந்த உடலில் உயிர் நம்மை உருவாக்கியது என்று எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.
உயிரின் உணர்வில் எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.
1.இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத் தடுக்கும் ஞானம் தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.
அதைப் பெறும் நிலையாகத் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.
ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.
1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் (சப்தரிஷி மண்டலம்) நாம் இணைந்திடல் வேண்டும்.
அங்கே இணைந்து விட்டால் நமக்கு அழிவே இல்லை.
அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.
எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான். ஆனால்
1.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால்
2.நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.
நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது.
1.நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
2.ஆகவே தான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.
இதைப் போன்று
1.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை குரு எமக்கு எப்படி ஈர்க்கச் செய்தாரோ
3.அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.
நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய் ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.