
ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்
வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா…” (நமது உயிரை) என்று சொல்லுங்கள். அந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா…” என்று எண்ணி அதைத் தடுத்து விடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும். அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
ஏனென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தும் போது
2.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் இரத்தத்தில் கலந்து செல்லும்… இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது.
3.அப்பொழுது நம்மை எவர் திட்டினாரோ இது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும்… அவர் திருந்தும் நிலை வரும்.
அவன் எடுத்துக் கொண்ட உணர்வு திருந்த எண்ணினால் வருகின்றது. ஆனால் நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.
இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்…
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.
பல விதமான குழம்பு வைக்கிறோம்… பல விதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வை மாற்றிச் சுவை மிக்கதாக மாற்றி விடுகிறோம். இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது.
கொஞ்சம் இதில் பொறுமை தேவை.
ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.
இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அவன் உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
ஒருவன் சாபம் விடுகின்றான்… அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.
1.அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் அந்தக் கணமே
2.“ஈஸ்வரா…” என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நம் வாழ்க்கையில் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு செய்து… அந்தத் தீமையான உணர்வுகளை “நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து வெளியே தள்ளிப் பழக வேண்டும்…” எமது அருளாசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.