ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

 

நாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில் ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நம்மிடம் நல்ல உதவிகளைப் பெற்றவர் அங்கே செல்கின்றார்… பார்க்கின்றோம். அதே சமயத்தில் அவர் அவசரமாகப் போகின்றார்.

நாம் அவர் பெயரைச் சொல்லி “இங்கே வாப்பா…” என்று கூப்பிடுகின்றோம். இருங்கள்… கொஞ்சம் நான் வந்து விடுகிறேன்…! என்று அவர் சொல்கின்றார்.

1.பார்…! அன்று காசு வாங்குவதற்கு நம்மைத் துரத்தி துரத்தி வந்து வாங்கிச் சென்றான்.
2.இன்று நாம் கூப்பிடுகின்றோம் வரமாட்டேன் என்கிறான்.
3.காசு வாங்குவதற்காக அன்றைக்கு என்னை மதித்தான்.
4.இப்பொழுது கூப்பிடுகிறேன்… அவன் ஓடுகின்றான்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவருடைய சூழ்நிலை எது…? ஒரு முக்கியமான காரியத்திற்கு இரயிலுக்குச் செல்பவர்கள் அதற்குண்டான டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் கொண்டு போய்க் கொடுத்தால் தான் செல்ல முடியும்.

வண்டியில் ஏறிய பின் அங்கே அந்த டிக்கெட் இல்லை என்றால் அவர்கள் முழிப்பார்கள். ஆகையினால் வண்டி கிளம்புவதற்கு முன் அதைக் கொடுக்க வேண்டும் என்று அவசரமாகச் செல்கிறார்.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? கூப்பிட்டதற்கு மரியாதை செலுத்தாமல் செல்கின்றான் பார்…! என்ற இந்த உணர்வு தான் மனிதனுடைய வாழ்க்கையில் தூண்டுகிறது.

ஒரு தடவை நாம் உதவி செய்தால்…
1.இரண்டாவது அவரை நாம் கூப்பிடும் பொழுது வரவில்லை என்றால் உடனே அவர் மேல் பகைமை ஆக்கிக் கொள்கின்றோம்.
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
3.எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக அங்கே பகைமை ஆக்கி விடுகின்றோம்.

இதற்குக் காரனம் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை அப்படி இயக்குகிறதே தவிர “நம் ஆறாவது அறிவை அங்கே சரியாகப் பயன்படுத்தவில்லை…” என்று தான் பொருள்.

அதை எப்படிச் சீராகப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் ஞானிகள் எத்தனையோ காவியப் படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
1.தீமையை நீக்கிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
2.உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
3.அந்த ஞானத்தின் வழி நம் உடலை அது இயக்கும்.

சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை…! இந்த உடலிலே பிறந்தது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சிவத்திற்குள் விளைந்தது தான். ஆனால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் பிரணவமாகி அதுவே நம்மை இயக்குகின்றது.

ஆறாவது அறிவு படைத்தவன்…
1.“இது நமக்குத் தீங்காகும் இருள் சூழ்ந்த நிலையாகும் வேதன என்ற நிலையாகும்” என்று தெரியக்கூடிய நிலையான கார்த்திகேயா
2.இந்த உடலில் விளைந்த அந்த உணர்வுகள்… இந்த உடலுக்குத் தீங்கு வராது பாதுகாக்கச் செயல்படுகின்றது.

தீமையை நீக்கிய அருள் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டுக் கிரியை ஆகின்றது. அதன் வழி நம் எண்ணம் சொல் செயலாகி தீமையை நீக்கி வாழ்க்கை ஒழுங்குபடுத்த இது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட வேண்டும். இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
1.நாம் சிந்தனை இழந்து இருந்தாலும் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அதன் வழி செயல்படும் சக்தி கிடைக்கும்.
2.குறைகள் கூறுவதை விட்டுவிடலாம்… மன நிறைவு என்றுமே நமக்குள் வளரத் தொடங்கும்.

உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்.
1.யாருமே செய்யாததை உங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம்.
2.எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்தச் சக்தியை நீங்கள் எண்ணி எடுக்கலாம்… தீமைகளைப் போக்கலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply