நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நாம் கட்டாயப்படுத்திப் பெற வேண்டிய சக்தி

நமது சகஜ வாழ்க்கையில் ஒருவன் தீய செயலைச் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது அதனின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் பதிவாக்கி விட்டால் பின் “அவன் தீய செயல்களைச் செய்கின்றான் செய்கின்றான்…” என்று அடிக்கடி எண்ணும்போது அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அவன் எந்தத் தீய செயலைச் செய்தானோ அதையே நாமும் செய்யக் கூடிய தன்மை வந்து விடுகின்றது.

அப்போது தியானத்தில் உட்கார்ந்தால்
1.இது முடியலே… அது முடியலே… உட்கார முடியலே…! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதான் வளரும்.
2.எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள்.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப் பெறும் பொழுது உங்களைச் சும்மா இருக்க விடாது.
4.அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும்.
5.இந்த உணர்வு வரும்போது பிறர் தீமைகளை அகற்றும் வலிமை பெறுகின்றோம்… தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

மனிதர்களான நாம் இந்தச் சரீரத்திற்குப்பின் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையில் முழுமை பெற வேண்டும்.

நமது குருநாதர் காண்பித்த அருள் வழியில் “துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும்” என்ற உணர்வை மட்டும் நீங்கள் கூட்டி வளர்த்துக் கொண்டால் போதும்,
1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்தையும் இவைகளின் இயக்கத்தின் உண்மைகளையும் அறியும் தன்மை வரும்.
2.தீமைகளை அகற்றும் சக்தியும் வரும்.

நமது உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதன் உணர்வை வளர்த்து அதன் உணர்ச்சியின் தன்மை கொண்டுதான் இந்த உடலை இயக்குகின்றது.

சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளை நாம் நுகரப்படும்போது தீமையான அணுக்கள் நமது உடலில் வளர்ந்து விட்டால் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அது தன் இனத்தைப் பெருக்குகின்றது.

ஆனால் தீமைகளை வென்ற அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி விட்டால் அதன் தன்மை கொண்டு தீமைகள் வராது காக்கும் நிலையினை நம்முள் உருவாக்குகின்றது.

இன்று ஒரு விஞ்ஞானி ஒரு உயிரினத்தின் செல்களை எடுத்து மற்றவைகளுடன் இணைக்கும் நிலையாகக் கட்டாயப்படுத்தித்தான் திணிக்கின்றான்.

1.இதன்படி இந்த உயிருடன் இணைத்துக் கொண்டபின் இதனின் ரூபமே மாறுகின்றது.
2.இப்படி ஆட்டை மாடாக்குகின்றான்… மாட்டை ஆடாக்குகின்றான்… எத்தனையோ வகைகளில் செயல்படுத்துகிறான்.
3.இப்படி ஒவ்வொன்றிலும் “கட்டாயப்படுத்தியே திணிக்கின்றான்…”

நாம் பள்ளிக்குச் செல்கின்றோம்… டாக்டருக்குப் படிக்கின்றோம். அங்கே எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்திக் காண்பிக்கின்றனர்.

ஆனால்… தானே கட்டாயப்படுத்திப் படிக்க வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உந்துதல் கொண்டு எவர் செயல்படுகின்றனரோ அவரே உயர்ந்த டாக்டர்களாக ஆகின்றார்கள்.

ஆனால் படிக்கும் பொழுது “இது என்னடா… சங்கடமாக இருக்கிறது…?” என்ற உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நிச்சயம் சங்கட டாக்டராகத் தான் வருவார்.

டாக்டரான பின் முதல் இரண்டு நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தபின் மூன்றாவது நோயாளியைப் பார்க்கும் பொழுது இவரை அறியாமலேயே சலிப்பு வந்துவிடும். இந்த உணர்வு கலந்தபின இவர் பார்க்கும் வைத்தியமெல்லாம் சீராக இருக்காது.
1.எனவே நாம் கட்டாயப்படுத்தித்தான்
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் தியானித்தல் வேண்டும்.

ஒரு விஞ்ஞானியோ இன்ஜினியரோ ஆராய்ச்சி என்ற தத்துவத்தில் வரப்படும்போது “இதைப் பெற வேண்டும்” என்று கட்டாயப்படுத்தி ஆராய்ச்சி செய்து உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வருகின்றனர்.

இப்படி வலுகொண்ட உணர்வு கொண்டு ஆராய்ச்சிகளைச் செய்யும் பொழுது தான் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறுகின்றது. இதன் வழி கொண்டு அகண்ட அண்டத்தையும் ஆய்ந்தறியும் நிலைகள் வருகின்றது.

ஒரு விஞ்ஞானி ஒன்றைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவருடைய மாணவன் அதைவிட ஒன்றைப் பெற வேண்டும் என்று தன் உணர்வை வலுபெறச் செய்யும் பொழுது அவன் குரு கண்டறிந்ததை விட அதிகமான ஒன்றைக் கண்டறியும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ந்ததுதான் விஞ்ஞானம்.

இதைப் போன்று நமது குரு காண்பித்த அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நாம் நமக்குள் பெறும் பொழுது
2.அகண்ட அண்டத்தின் பேருண்மையின் தன்மைகளை அறியும் ஆற்றல் பெறுகின்றோம்.

நமது உணர்வின் தன்மையே நமக்குள் ஒளியாக மாற்றும் பொழுது மிகவும் உயர்ந்த நிலைகளை நாம் பெறுகின்றோம்.

நமது உயிருக்கு என்றும் அழிவில்லை. உணர்வுகள் மட்டுமே மாறிக் கொண்டே உள்ளது. ஆகவே நாம் இன்று மனிதனாக இருக்கிறோம். இந்த மனித உடலில் விஷமான உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் உயிர் அடுத்த சரீரத்தை விஷப் பாம்பாக மாற்றிவிடுகின்றது.

அருள் ஒளி என்ற உணர்வினை நம் இந்திரலோகத்திற்குள் உருவாக்கி நம்முள் ஏகாந்த நிலை கொண்டு சொர்க்கலோகத்தை உருவாக்கலாம்.

இதை நாம் நம்முள் கட்டாயப்படுத்திச் செயலாக்க முடியும். மனிதரால் இது சாத்தியமாகக் கூடியதே…!
1.சிறிது காலம் இந்த உணர்வின் தன்மையை நம்முள் வளர்த்தால் இந்த உணர்வுகள் நமக்குள் சொர்க்கபூமியாக மாற்றும்.
2.நம் உயிரைச் சொர்க்க வாசலாக அமைக்கலாம்.
3.உயிருடன் ஒன்றி உயிரின் வழி கொண்டு நமக்குள் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்கி
4.என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையை அடையலாம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply