மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா…?

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும்.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது…? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது…?

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத்தான் வரும்” என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும். தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது…?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது…?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்… இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.

உதாரணமாக… பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி… பரிவுடன் பார்த்தாலும் சரி… அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக… குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன…? ஏது…!” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்… தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும்.

நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு “மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல்ல உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply