
எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்
குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார். ஏன் கொடுத்தார்…? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்… எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறச் செய்ய வேண்டும் என்று கொடுத்தார்.
1.ஆகவே எதையும் தாங்கக்கூடிய சக்தியும்…
2.நன்மை செய்வதற்கு ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் செயல்படுத்தச் சொன்னார்.
அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.
நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் தேடிய செல்வங்கள் தான் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று முகப் பவுடர் அது இது என்று பூசுகின்றோம்.
ஆனால் உடலில் ஒரு நோயிருந்து அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்களிடம் வந்து “பவுடர் பூசிக் கொள்ளுங்கள்…” என்று சொன்னால் “என்ன…? கிண்டலா செய்கின்றீர்கள்…! அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்…?” என்று கேட்பீர்கள்.
நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில் நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும் மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால் முகம் சுருங்கிவிடும்.
ஆகையால் பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள்…? “என்னங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்…? ஏதேனும் கவலையா…?” என்று கேட்பார்கள்.
ஆகவே நம்மை எது செயல்படுத்துகிறது…?
அருள் உணர்வை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்ய வேண்டும்.
1.சாதாரணமாக இருக்கும் பொழுது எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும்.
2.அருளைப் பாய்ச்சும் பொழுது வித்தியாசமான தோற்றங்கள் வரும்.
3.இது போன்று நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும் மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது.
உதாரணத்திற்கு நீங்கள் அருள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்த நேரத்தில் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.
ஒருவர் உங்களைத் தேடி வந்து தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம் ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.
ஆனால் இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால் “என்ன இது…? இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்…” என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.
ஏனென்றால் அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.
ஆனால் இந்த நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெற வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்,
2.அவருக்கு நல்ல காலம் வரவேண்டும் சிந்திக்கும் தன்மை அவர் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அது சமயம் உங்களுடைய உயிர் என்ன செய்யும்…? அருள் உணர்வை எடுத்து உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டுத் தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும்… வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும்… உங்களுக்குள் பெறச் செய்கின்றது.
நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால்… “இவனால் தான் எனக்குத் தலைவலி” என்பார்கள். அவர்கள் வந்தாலே… “ஆகா வந்துவிட்டான்… தலைவலியும் வந்துவிட்டது” என்று கூறுவார்கள்.
இன்று நல்ல மன நிலையில் இருந்தேன். “இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது…” என்று கூறுவார்கள். மனிதரின் வாழ்க்கையில் இது போன்ற நிலைகள் வருகின்றன.
தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் “மகரிஷிகளை எண்ணி…” அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும்.
1.அடுத்து முறை தலைவலி என்று சொல்ல வரும் பொழுது
2.உங்களை நினைத்து வந்தேன்… தலைவலி போய்விட்டது…! என்று கூறுவார்கள்.
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின் நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.
ஆனால் ஒருவர் வந்தாலே தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,
ஒருவரைப் பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும் அவர் நன்மை செய்யும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
காரணம்… நுகர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது.
1.மனிதர் தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று…
2.பிறவி இல்லா நிலை பெறுவதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் கொடுப்பது.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.