வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

 

“வைகுண்ட ஏகாதசி” என்ற நிலைகளைக் கொடுத்த ஞானிகள் பெருமாள் விஷ்ணு ஆலயங்களில் “சொர்க்கவாசல்” என்ற நிலைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களைக் காக்கும் நிலையைத் தெளிவாக்கினார்கள்.

அதாவது நமது மூக்கு நமக்கு முதல் வழி… நேர்வழி. நாம் நமது கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். நமது உயிர் நாம் சுவாசித்த உணர்வுகளை அதனின் உணர்வின் சக்தியாக நமது உடலில் அமைத்து விடுகின்றது.

1.நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் அணுவாக நமது உடலில் விளைந்து
2.பின் அந்த அணு அதனின் குணத்தின் சத்தைக் காற்றில் கலந்திருப்பதை
3.நம் சுவாசத்தின் வழிக்கூடி நுகர்ந்து… தன்னுள் கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நாம் எந்த குணத்தை எடுத்தோமோ அந்தக் குணத்தை நாம் சுவாசிக்கும் பொழுது “அது உயிரில் மோதி…” அதனின் உணர்வின் சத்தை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது.

ஆனால் அதனின் உணர்ச்சிகள் நமது உடலில் இயங்கி அதற்குத் தக்கவாறு நமது உடலை இயக்கிக் கொண்டுள்ளது என்ற நிலையை நமக்கு உணர்த்துவதற்காக ஞானிகள் “சொர்க்கவாசல்…” என்ற நிலைகளை ஆலயங்களில் ஏற்படுத்தினார்கள்.

நாம் வைகுண்ட ஏகாதசியன்று என்ன செய்கின்றோம்…?

இரவு முழுவதும் கண் முழித்திருந்து காலை 4.00 மணிக்கெல்லாம் சொர்க்கவாசல் திறப்பார்கள் என்று கோவிலுக்குச் செல்கிறோம்.

சொர்க்கவாசல் வழி சென்றால் சொர்க்கத்தை அடைவோம்…! என்ற எண்ணத்துடன்தான் நாம் செல்கின்றோம்.
1.இது எப்படி இருக்கிறது…? என்றால் ஏட்டில் சுரைக்காயை வரைந்து
2.அதைக் குழம்பில் போட்டுச் சமைத்துச் சாப்பிடுவது போன்று இருக்கின்றது.

இரவு உணவு உட்கொள்ளாது விடிய விடிய விழித்திருந்து 4.00 மணிக்கெல்லாம் ஆலயத்திற்குச் சென்று அங்கே சொர்க்கவாசலைத் திறந்ததும் கூட்டத்துடன் முண்டியடித்து மோதிக் கொண்டு சென்று அங்கே வைத்திருக்கும் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் செய்தால் அந்தத் தெய்வம் நமக்கு நல்லது செய்யும்… நம்மைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்…! என்று “சாங்கிய சாஸ்திரங்களை வைத்துத்தான்” நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் பேருண்மையின் தன்மைகளைக் காண முடியாத நிலைகளில்தான் இருக்கின்றோம்.
1.பேருண்மைகளை யாம் உங்களுக்கு வெளிப்படையாக இப்பொழுது உபதேசித்தாலும்
2.“இது என்ன புதிதாக இருக்கின்றது…?” என்று புதிர் போட்டுக் கேள்வி கேட்டு
3.கேள்விக் குறியாகத்தான் யாம் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

யாம் உபதேசிப்பதைக் கேட்டாலும் புதிதாக இருக்கின்றது புதிராக இருக்கின்றது என்றும் இதனின் உணமையை உணர்ந்து கொண்டாலும்,
1.மற்றவர்கள் இதைப் பெற முடியுமா…? இதன்வழி பின்பற்றி நடப்பார்களா…? என்று
2.நாம் மற்றவர்களைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகின்றதே தவிர
3.நாமும் பெறுவோம் நம்மைச் சார்ந்தவர்களையும் பெறச் செய்வோம் மற்ற அனைவரையும் பெறச் செய்வோம் என்ற
4.இந்த உணர்வுகள் நம்மிடத்தில் இன்னும் வளரவில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த பேருண்மையின் தன்மைகள் நம் மனதில் இருந்து மறைந்தே போய்விட்டது.

ஆனால் மகரிஷிகள் தமது உடல்களில் விளைவித்து வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நமது பூமியில் படரச் செய்துள்ளது… அது அழியவில்லை.

அவர்கள் சப்தரிஷி மண்டலமாகவும் துருவ நட்சத்திரமாகவும் இருந்து ஒளிச்சரீரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் இந்த[ப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி தீமைகள் தம்மைச் சாராத நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள்.

அவ்வாறு மாற்றிய உணர்வுகளை அவர்கள் தம் உடலில் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் படரச் செய்துள்ளது.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாகத் தமது உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து “வேகா நிலை” என்ற நிலையை அடைந்தார்கள்.

1.இந்தப் பேரண்டத்தில் எத்தகைய மாற்றங்கள் நடைபெற்றாலும் இவர்கள் உயிர் அழிவதில்லை
2.உடலில் இருந்து ஒளியாக மாற்றிய உணர்வுகளும் மாறுவதில்லை.
3.ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி இன்றும் விண்ணின் ஆற்றலை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இதன் நிலைகளை நாமும் பெற வேண்டும் எனும் நிலைக்காகத்தான் அன்று ஞானிகள் நமது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் சீராக பயன்படுத்தச் செய்து நமது வாழ்க்கையில் சொர்க்கத்தைப் பெறும் நிலையாகவும்… “சொர்க்கவாசலை எதன் வழி கொண்டு திறக்க வேண்டும்…?” என்பதையும் ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள்.

ஆனால் யாரும் அதை பின்பற்றவில்லை. அபிஷேகம் ஆராதனை செய்தாலே போதும்…! என்ற நிலைக்குச் சென்று விட்டோம்.

மெய்யுணர்வை நமக்குள் நுகர்ந்து நம் உயிருக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்து மகரிஷிகளின் அருள் உணர்வை நம் உடலுக்குள் பரவச் செய்து அதனை ஆராதனையாக்கி நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வை உணவாகக் கொடுத்து அதனின் நிலையை வளரச் செய்வதற்குத்தான் ஆலயங்களில் சொர்க்கவாசல் என்ற நிலைகளை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நாம் ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும் நேர் வாசல் மூலம் தான் செல்கின்றோம். ஆனால்
1.வைகுண்ட ஏகாதசி அன்று “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் (வடக்கு வாசல்) மூலம் உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.
2.நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டு விட்டு
3.நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக… ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.
4.அந்த வாசல் (உயிர்) வழியாகச் சென்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்த வேண்டும்.

பின் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி
1.மூக்கு வழி சுவாசிப்பதைக் காட்டிலும்
2.புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெற வேண்டும்
3.நமக்கு சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி.

இப்படி நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நமக்குள் உயிர் வழி சேர்த்துப் பழக வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் தெய்வ குணங்கள் பெற வேண்டும் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்களில் அமைதி பெற வேண்டும் அருள் ஒளி படர வேண்டும் என்று நாமும் மற்றும் அனைவரும் எண்ணும் பொழுது நம்முள்ளும் மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும் நல்ல உணர்வுகள் விளைகின்றன.
1.அந்த உணர்வுகள் நம்முள் விளைந்து ஒளியின் சரீரம் பெறும் தகுதி நாம் அனைவரும் பெறுகின்றோம்
2.ஞானிகள் மகரிஷிகள் சென்ற சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம்.

இது தான் வைகுண்ட ஏகாதசி…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply