
பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!
ஜாதகம் ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா…? என்று பார்த்து நல்ல நேரம் பார்த்துத் தான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
ஆனாலும்
1.திருமணம் முடிந்து வந்தவுடன் இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில் இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன.
2.இதனால் கணவன் மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன.
இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும் வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.
ஏனென்றால் பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன.
நாம் இவ்வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிய நேரும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலை கொண்டு நாம் நுகர்கின்றோம்.
நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து “நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றி விடுகின்றோம்…” அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.
கணவனும் மனைவியும் வெறுப்பு என்ற நிலைகளோ வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி
1.அதிகாலையில் துருவ தியானத்தில் அமர்ந்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.என் கணவர் / மனைவி பெற வேண்டும்… எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
3.எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.
இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.
நமது வாழ்க்கையில் இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். வெப்பம் காந்தம் விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
1.காந்தம் “ஆதிலஷ்மி…” எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்
2.வெப்பம் “ஆதிபராசக்தி…” அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்
3.விஷம் “ஆதிசக்தி…” எதனிலும் மோதலாகி அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
அதாவது பெண்பால் ஆகித்தான் ஆண்பால் ஆகின்றது. பெண்பால் என்னும் பொழுது அது தாயாகின்றது. பெண்பால் தான் தாய் என்னும் நிலையில் தன் குழந்தைகளையோ மற்ற நிலைகளையோ சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது.
1.ஆகவே நாம் பெண்களைத் தாயாகவும் நம்மை ஒரு சேயாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.இது போன்று பெண்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு தாயாகவும் தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்.
இதைத்தான் இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய எண்ணங்களை (கணவன் மனைவி) ஒன்று சேர்த்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான் நாம் விண் செல்ல வேண்டும்.
நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால் நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.
நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்வுகள் படரும்.
ஒரு இல்லத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது “அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது…”
அந்த இல்லத்தில் உள்ள பெண்களில் யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே குடும்பமே நரக லோகமாக மாறிவிடும். ஆகவே நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.
1.இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ
2.பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ
3.இதனின் உணர்வுகள் கொண்டு அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும் இருளை அகற்றும் சக்தியும்
4.அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்
5.அன்பான உணர்வுகள் நமக்குள் பெருகவும் மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்ச்சிகள் வளரவும்
6.பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.
பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!
இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுது தான் உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது.
எந்தக் குணத்தின் தன்மை உடலானதோ அதனின் உணர்ச்சியாக ஞானமான சரஸ்வதி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் வெறுப்படைந்து விட்டால் அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால் அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள் மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு குறை கூறும் நிலையில் அங்கே குறையின் உணர்வுகளே வந்து விடுகின்றது.
முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும், இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்கின்றோம்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
முதுமை நிலையில் இருக்கும் நாம்… தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம் காலை துருவ தியானத்தில்
1.தன் மகன் மருமகளுடன் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
ஏனெனில் ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும் அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.
ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வுகளையும் நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
இது போன்று செய்து வரும் பொழுது
1.நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி தோஷங்கள் ஆகிவிட்டது என்றாலும் சரி
2.அல்லது நம்மை அறியாமலேயே சாப வினைகள் வந்தாலும் சரி
3.அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு அந்தத் தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.
உண்மையான யாகம் எது…?
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெற வேண்டும்” என்ற உணர்வை
1.உயிரான நெருப்பினுள் போட்டு இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்
2.வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும் எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.
கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும் மனஸ்தாபங்களும் வரும் போது பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள் இங்கே புவியில் படர்கின்றது.
இது போன்ற வேதனையின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறியும் பொழுது நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் இனியாவது… நமது குடும்பம் நமது குழந்தைகள் நமது ஊர் நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெற வேண்டும். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும்.
நாம் ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என் கணவர் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெற வேண்டும் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெற வேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நாம் எல்லோரும் பரப்புவோம்.
இதனின் தொடர் கொண்டு நமது குடும்பத்திலும் நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் இருளை அகற்றும் வல்லமையும் மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும்.
குடும்பமும் ஊரும் நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து அவர்களையும் பண்படச் செய்து மகிழ்ச்சியுடன் வாழச் செய்கின்றது.
மனிதர்களான நாம்
1.கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று உணர்ந்து
2.தனுசுகோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு
3.தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி இனி பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.
இதனின் உணர்வு கொண்டு மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இருளை வென்று மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றுப் பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்றுப் பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.