
தொட்டுக் காட்டுதல்
யாம் உபதேசிக்கும்போது கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
1.இந்த உணர்வைக் கண்ணின் கரு விழி உங்களுக்குள் படமாக்குகின்றது… பதிவாக்குகின்றது.
2.சொல்லக்கூடியதைக் காந்தப்புலன் அறிவுகள் உள்ளே இழுக்கின்றது.
அன்று நான் குருநாதரைச் சந்தித்துப் பெற்ற உணர்வுகளை எடுத்து உங்களுக்குச் சொல்லும் பொழுது “கண் வழியாகவும் சொல்வழி கூடியும்…” வெளிப்படுகின்றது. “மூலக்கூறுகளை…” குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
இங்கே வந்து எம்மைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமல்ல…! இதைக் கேட்டுணர்ந்தோர்… படித்துணர்ந்தோர்… பல பாகங்களில் மற்றவருடன் பழகப்படும் பொழுது
1.சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லம் எங்கே எந்தக் குறைகளை நீங்கள் கண்டாலும்
2.நம் குரு அருளின் தன்மை அங்கே குறைகளை நிவர்த்திக்கும் உணர்வலைகளாகப் பாயும்.
3.குறைகளை அணுக விடாது… உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.
அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.
உதாரணமாக ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள். அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவர்கள் உணர்வை மீண்டும் நமக்குள் கவரத் தொடங்கும். அப்பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.
அந்தத் தடைகளை விதிப்பதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று நம்முடைய எண்ணம் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராதபடி அதைத் தணிக்க வேண்டும்.
1.அதற்காகத்தான் இயக்கத்தின் உண்மை நிலைகளை விரிவாக்கப்பட்டு உங்கள் நினைவாற்றலுடன் இதைப் பதியச் செய்வது.
2.இது தான் தொட்டுக் காட்டுதல் என்பது.
பொட்டிலே தொட்டுக் காட்டுதல் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது “அவர்கள் தொட்டுக் காட்டுகின்றார்கள்…! அங்கே பதிவாகின்றது…” ஆனால் தொட்டுக் காட்டிய “மனிதனுடைய நினைவு தான்” அங்கே வரும்.
ஆனால் நாமோ குருநாதர் கொடுத்த அந்த உணர்வின் சக்தியை
1.மகரிஷிகள் ஞானிகள் எதைப் பெற்றார்களோ அதை ஒவ்வொரு உணர்வுகளிலும் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைப் பதிவு செய்கின்றோம்.
2.நமக்குள் எத்தனையோ கோடி குணங்கள் உண்டு… அதில் எத்தனையோ வகைகள் உண்டு.
3.அதற்குள் ஞானிகள் உணர்வை இணைக்க வேண்டும்
4.அப்படி இணைத்தால் உங்களுக்குள் அது கருவுற்று ஞானிகள் உணர்வோடு வளர்வதற்கு இது உதவும்.
ஏனென்றால் பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தால் உடனே மனம் மாறுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடைய செயலைப் பார்த்தால் மனம் மாறுகின்றது.
தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம் அவர்கள் வீட்டிற்குள் சென்றால்… வீட்டிலே வேறு விதமாக இருப்பார்கள். எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்திருப்பார்களா…? யாரோ ஒருத்தர் எதிர்மறையாக இருப்பார்.
தியானத்திற்குப் போகின்றாராம்… ஏதோ அள்ளிக் கொட்டுகின்றாராம்…! என்று நாம் அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது பேசுவார்கள்.
என்னடா…! இப்படிப் பேசுகின்றார்கள்…? என்ற உணர்வுகள் வந்து விட்டால் நாம் எதன் மீது பற்றாக இருக்கின்றோமா… அதைக் குறை கூறும் பொழுது இந்தக் குறைகள் அதிகமாக வளர்ந்து விடுகிறது.
நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகின்றது. இப்படியும் நமக்குள் வருகின்றது.
ஆகவே இந்தத் தீமையின் விளைவுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தி இதை வலுப்பெறச் செய்து
2.அவர்கள் எப்படியும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நினைவாற்றல் நமக்குள் உருவாக வேண்டும்.
3.அப்பொழுது நம் நினைவலைகள் அங்கே படரும்… நம்மையும் பாதுகாக்கும்
4.அவர்கள் நம்மை எண்ணினால் அங்கே ஊடுருவி அவர்களை மாற்றும் நிலைக்கும் வரும்.
5.அவ்வாறு மாற்றும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நல்ல சக்தியாக பூமியிலே பரப்பவும் செய்யும்.
மற்றவர்களுக்கும் அது நல்ல உணர்வை ஊட்டும்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.