
அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது
மனிதருக்குள் பதிவான அசுரத் தன்மைகளை மாற்றுவதற்குக் குருநாதர் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும்… நமது நாட்டில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றும் அவன் வாழ்வது போன்று நம் தென்னாட்டிலே மீண்டும் இது தழைக்கின்றது.
2.மற்ற நாடுகளில் இல்லை… தென்னாட்டில் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கலந்த இந்தக் கலாச்சாரங்கள் விளைகின்றது.
3.அதன் அடிப்படையில் தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அந்த அகஸ்தியன் உணர்வை உணர்த்துவதும்… உணரச் செய்வதும்.
4.அவர்கள் வளர்ந்தால் அந்த மெய்ப் பொருளின் நிலைகளில் அவருடைய வளர்ச்சியில் நாமும் பெறலாம்.
5.அந்த உணர்வுகளை இங்கே படரச் செய்யவும் முடியும்…. ஆகவே அதை நாம் வளர்த்தல் வேண்டும்.
தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்தில் தொடர்பு கொண்டாலும் அங்கே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவில் உருவாகும் அந்தக் குழந்தைகள் “அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
அழகான சாமி படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அது போன்ற அழகான குழந்தையாக வளர வேண்டும். மகாலட்சுமி போன்று… மகா சரஸ்வதி போன்று சர்வ ஞானம் பெற வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை பெற்ற நிலையில் இருளைப் போக்கும் மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லி அந்த ஞானிகள் காட்டிய வழியினைச் சொல்லுங்கள்.
குடும்பத்தில் மகரிஷிகள் உணர்வுகள் படர வேண்டும். குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவில் வளரும் இந்தக் குழந்தை பெற வேண்டும். உலகில் ஒன்றி வாழும் இந்த உணர்வின் சக்தி அந்த குழந்தையின் கருவிலே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.
1.அந்தக் குழந்தை வளர வளர வளர தென்னாட்டில் வளரும் அத்தகைய குழந்தைகள் எந்நாட்டவரையும் காக்கும் சக்தியாக வரும்.
2.அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தது போல எந்நாட்டவரும் அந்த ஆற்றலைப் பெறும் தன்மையும்
3.அதன் வழியில் மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
4.நாம் முன் செல்கிறோம்… பின் வருவோரின் நிலைகளூம் அதே வழியில் செல்லும்.
5.ஏனென்றால் இனம் இனத்தைத் தான் வளர்க்கும்.
எதிலே எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கின்றது. தன் இனத்தின் சத்தை தன் வித்திற்கே உணவாகக் கொடுக்கின்றது.
இதைப் போல தான் தீமைகள் மனிதனுக்குள் விளைந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதையே உணவாக ஊட்டி தீமையின் விளைவாகவே இயக்கச் செய்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரையும் மீட்க வேண்டும். பன் மடங்கு ஞானிகளை உருவாக்க வேண்டும். உங்கள் சொல்லால் செயலால் இதை வழிப்படுத்துங்கள்.
இரவிலே தூங்கும் போது ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு
1.முடிந்த மட்டும் இந்த உலகம் அந்த அகஸ்தியன் சென்ற அருள் வழியில் இப்படித்தான் வரவேண்டும் என்று தியானியுங்கள்.
2.தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று யாம் சொன்ன இந்த உபதேசத்தின் உணர்வைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த நினைவினை எண்ணி வளர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லோராலும் சாத்தியமானது தான்.
1.சிறிது நாளைக்குச் சொல்லிப் பாருங்கள் தன்னாலே வந்துவிடும்.
2.அப்பொழுது உங்கள் உணர்வுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் உலாவலாம்.
“இந்த அற்புதங்களை…” மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
1.சாமி மட்டும் பார்த்தேன் என்ற நிலைகளை…
2.சாமி பார்த்ததை எங்களாலும் பார்க்க முடியும்.
3.சாமி பார்வையால் தீமைகள் போகும்… “சாமி சொன்ன வழியில் என் பார்வையால் தீமைகள் போகும்…” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
அந்த வளர்ச்சியை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
உங்கள் மூச்சு சாதாரணமானதல்ல…! அந்த உணர்வுகள் இந்த உலகில் படரும்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் தவக்கோலம் பூண்டு உலக மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இதைப் பதிவு செய்யுங்கள்.
2.அவர்களுக்குள்ளும் அது விளைகின்றது… அவர்களுக்குள் விளைய வேண்டும் என்ற எண்ண அலைகள் இங்கே பரவும்.
3.இதனுடைய பெருக்கம் கூடக் கூட உலகில் எதிர்காலத்தில் வரும் தீமைகள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து விலகும்.
நமக்குள் முந்திய உணர்வின் தன்மை ஒடுங்கும்… எது நமக்குள் சேர்ந்திருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கும்.
இதை எல்லாம் நிச்சயம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டும். குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.