
நாம் அனைவரும் செய்ய வேண்டிய குரு சேவை… அருள் சேவை…!
உங்களுக்கு யாம் அடிக்கடி உபதேசித்த அருள் சக்திக்கு வலுக்கூட்டும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டி
2.அனைவரும் ஒன்று சேர்த்துத் தியானிக்கும்படி செய்து
3.என் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் அனைவரது உயிரையும் ஈசனாக மதித்து
4.ஈசனால் கட்டப்பட்ட உடல்களை ஆலயத்தை மதித்து
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் தெய்வமாக மதித்து
6.உங்களை அறியாது உட்புகுந்த தீமைகள் நீங்க வேண்டும்
7.மனிதனாகக் காத்திட்ட அந்த அருள் தெய்வங்களான நற்குணங்கள் உங்களுக்குள் நிலைத்திருக்க வேண்டும் என்று
8.உங்களை நான் தியானிக்கின்றேன்… “என் குரு வழிப்படி…”
இப்போது உபதேசித்த உணர்வின் துணை கொண்டு நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது நம் முன் படர்ந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை…
1.பிறவா நிலை அடைந்த அவர்களின் உணர்வைக் கவர முடியாதபடி சக்தி வாய்ந்த நிலைகளாக இருந்தாலும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை நினைவுக்குக் கொண்டு வந்து அதே நினைவின் வலுக் கொண்டு
3.நம் முன் படர்ந்திருக்கும் அந்த அரும்பெரும் சக்தியை அனைவரும் சேர்த்துக் கவர்ந்து
4.நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலச் செய்து
5.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை அகற்றும் உணர்வாக கலக்கச் செய்து… அதன் உணர்வைச் சுவாசிக்கும்படி செய்து
6.அதை எப்பொழுதும் பெறும் நிலையாக உடலுக்குள் ஞான வித்தாக உங்களுக்குள் இப்போது ஊன்றப்படுகின்றது.
அவ்வாறு ஊன்றிய பின்… அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் தியானத்தில் அமர்ந்த அனைவருக்கும் மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி ஏங்கி அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
அவரவர் உடலுக்குள் வெறுப்பு கோபம் குரோதம் என்ற எத்தனையோ உணர்வுகள் இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கி வளர்த்து அனைவருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
1.தனக்கென்று கேளாது அனைவருக்கும் அது பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.சூரியன் காந்த சக்தியால் இது கவரப்பட்டுச் சக்தி வாய்ந்த உணர்வின் அலைகளாகப் படர்வதை
3.உங்கள் செவிப்புலனுக்குள் உணர்ச்சிகளை உந்தச் செய்து
4.அதனின் துணை கொண்டு உங்கள் கண் புலனறிவு அதைக் கவர்ந்து
5.எல்லோரும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.
ஏனென்றால் உங்களுடைய அனைவருடைய அருள் துணை கொண்டு இவ்வாறு செயல்படுத்தும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் இது சக்தி வாய்ந்ததாக இது மாறுகின்றது. அதனைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானமாக அமைத்துக் கொடுத்துள்ளோம்.
மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்…!
யாரையெல்லாம் யாம் சந்தித்தோமோ… உபதேசம் கேட்ட அந்த அனைவருக்கும் எமது குரு அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலை அவன் கட்டிய கோட்டையாக மதித்து உங்களை வளர்த்திட்ட அருள் குணங்களைத் தெய்வங்களாக எண்ணி அந்தச் சக்தி பெற நான் தியானிக்கின்றேன்.
அதே போல் நீங்களும் உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்களிடம் இருக்கும் அருள் குணங்களைக் காத்திடும் நிலையாக அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானித்தால்
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான…
2.நீங்கள் எண்ணியதை உயர்த்தும் அந்த உயிரான ஈசனுடைய அருளைப் பெறுகின்றீர்கள்.
அதே சமயம் அவன் கட்டிய ஆலயமான இந்த உடலைப் பரிசுத்தமாக்க… நஞ்சினை நீக்கி ஒளிச் சுடராக மாற்றும் ஆலயமாக உருவாக்கிட… அவனுடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீங்கள் நிலைத்திருக்க… உங்கள் ஆறாவது அறிவு உறுதுணையாக இருக்கும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன் என்று தியானியுங்கள்.
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன் என்று நினைவு கொள்ளுங்கள்.
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து நற்குணங்களை எல்லாம் தெய்வங்களாக மதித்து உங்கள் வாழ்க்கையில் இவ்வாறு தியானிப்பீர்கள் என்றால் அருள் ஞானிகள் சுழற்றிய அந்த உணர்வுடன் உங்கள் எண்ண அலைகள் சுழன்று அறியாது வந்த தீமைகளை ரிமோட் கண்ட்ரோல் போன்று நீக்க முடியும்.
ரிமோட் கண்ட்ரோல் என்றால்…
1.விஞ்ஞான அறிவால் ஓரு சுவிட்சைத் தட்டி மேலே பறக்கும் விமானத்தையும் ராக்கெட்டையும் இங்கிருந்து இயக்குவது போல
2.ஞானிகளை எண்ணியவுடன் நம் நினைவுகள் அவர்கள் பால் சென்று அவர்களின் உணர்வினைக் கவர்ந்து
3.தீமையை நீக்கிடும் அந்த அரும்பெரும் சக்தியாகத் தனக்குள் விளைந்து
4.இந்த உடலே தீமைகளை அழித்திடும் நிலையாக ஒளியின் சுடராக மாற்றிடும் நிலையாக எல்லோரும் பெற முடியும்.
உங்களை நம்புங்கள்…! உயிரைக் கடவுளாக மதியுங்கள்…! உடலை ஆலயமாக மதியுங்கள்…! திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.
ஏன்… உங்களால் நல்லதைப் பெற முடியும் என்று “உங்களை நீங்கள் நம்ப முடியாதா…?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.