கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து

 

உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.

அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.

ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.

அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.

இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.

ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”

அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.

அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.

ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.

தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்… இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.

தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”

கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.

அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.

அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.

இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.

ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.

இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply