
கோலமாமகரிஷி தவமிருந்த குகைக்குள் தியானிக்கும் போது குருநாதர் எனக்கு உணர்த்திய உண்மைகள்
நான் கொல்லும் உயிரினங்களின் உயிரான்மாக்கள் மனித உடலுக்குள் வந்த பின் மனிதனின் உணர்வை நுகர்ந்து அது கருப்பைக்குள் செல்லும்போது மனித உருப்பெறும் தன்மைகள் எப்படிப் பெறுகின்றது…?
மனித உருப் பெறும் பொழுது
1.அந்தத் தாய் வேதனை கொண்டவரையோ சலிப்படைந்தவரையோ சங்கடப்படுவோரையோ
2.கால் முடமானவர்களையோ கண் இழந்தவர்களையோ இதைப் போன்று பார்க்கப்படும் பொழுது
3.அந்த உருவத்திலிருந்து வெளிப்படுவதை சூரியனுடைய காந்த சக்தி கவரும் பொழுது
4.கர்ப்பமான தாய் நுகர்ந்து விட்டால் கருவிலே எவ்வாறு அது உறுபெறுகின்றது…?
ஒவ்வொரு நொடிகளிலும் ஒரு உயிரணு ஒரு உடலுக்குள் செல்வதும் மனித உணர்வை நுகர்ந்து மனிதனாகப் பெறும் நிலையும்… தாயின் கருப்பைக்குச் சென்ற பின் கருவிலே வளரும் பொழுது தாய் நுகரும் உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக எவ்வாறு அமைகிறது…? என்ற நிலையையும் காட்சியாகக் காட்டினார் குருநாதர்.
1.குறைந்தது ஒரு லட்சம் உணர்வுகளை அறிந்து கொள்வதற்காக
2.மூன்று வருடம் அதைக் காணும்படி செய்தார்.
அப்போது சரியான ஆகாரம் கிடையாது. குறித்த நேரம் விடுபடும் பொழுது பச்சிலைகளைச் சாப்பிட்டு விட்டு பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு வெறும் தண்ணீரைக் குடித்துக் கொள்ளும்படி சொல்வார்.
அரை மணி நேரம் கொடுப்பார்… அதற்குள் அதைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அமர்ந்து அவர் சொல்வதைக் காணும்படி செய்வார்.
இவை அனைத்தையும் கொல்லூர் என்று சொல்லும் முகாம்பிகை மலைக் காட்டில் தான் காட்டினார். அங்கே மேலே தபோவனம் என்று உண்டு.
1.அங்கே கோலமாமகரிஷி தியானமிருந்த இடம் ஒரு குகையாக இருக்கும்.
2.ஆனால் பெரிய வனமாக இருக்கும்… மலை மீது செல்ல வேண்டும்… கூடு மாதிரி இருக்கும்
3.அதற்குள் அமர்ந்து அவர்கள் பெற்ற உணர்வுகளையும் மற்றதையும் அறியும்படிச் செய்தார்.
மற்ற உயிரினங்களை மனிதன் கொல்வான் என்றால் அவர் உடலுக்குள் செல்வதும் அது எப்படி எந்த நிலை ஆகிறது என்பதை உணர்த்தினார்.
செல்ல பிராணிகளை இன்று நாம் வளர்க்கின்றோம் அல்லவா. அவைகள் இறந்த பின் யார் மீது பற்றுள்ளதோ அந்த வளர்த்தவர் உடலுக்குள் சென்று மனிதனாக எப்படிப் பிறக்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஏனென்றால் நாம் எத்தனையோ நிலைகள் பட்டு இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.அவர்கள் எத்தனையோ இன்னல் பட்டு உயர்ந்த உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள்.
3.அதை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்தச் சந்தர்ப்பம் நம்மைப் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.
அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.