
குலதெய்வங்களை வழிபடும் முறை
மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வுகளை அடிக்கடி உங்களைச் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டால் வினைக்கு நாயகனாக ஆகி இயக்கி கணங்களுக்கு அதிபதியாகி
2.நஞ்சினை வென்றிட்ட அருள் உணர்வுகள் அவ்வழியில் கணங்களுக்கு அதிபதியாகும் (உடலுக்குள்).
அதிகாலையில் இத்தகைய ஆற்றலைப் பெறும்படி… அந்த உணர்வை நுகரும்படி… அந்த எண்ணங்களை நமக்குள் ஊட்டும்படி… “ஒரு பழக்கம்” வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் உருவ நிலைகளை ஆலயங்களிலே அமைத்து அருவ நிலையில் உயர்ந்த சக்திகளைப் பெற வழி காட்டினார்கள் ஞானிகள்.
இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த வழியினை நாம் எடுத்தால் அந்த உணர்வுகள் ஓ என்று ஜீவணுவாக உருவாகி நம் உடலுக்குள் அதுவே தெய்வமாகின்றது.
1.அந்த உயர்ந்த குணங்கள் நமக்குள் கடவுளாக நின்று பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது.
2.தெளிந்திடும் மனமும் மகிழ்ந்திடும் உணர்வையும் ஊட்டுகின்றது.
ஒவ்வொரு நொடியிலும் வரும் தீமைகளை நாம் இந்த வாழ்க்கையில் அதை அகற்றிக் கொண்டே வருதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அடிக்கடி வலு சேர்க்க வேண்டும்.
அதிகாலையில் இருந்தே இது போன்ற உணர்வுகளை வரிசையாக எடுத்து எங்கள் தாய் தந்தையருக்கும் முன்னோர்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.எனக்காகப் பட்ட துன்பங்களிலிருந்து என் தாய் தந்தையர் விடுபட வேண்டும்.
2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவ வேண்டும்
4.நஞ்சினை வென்றிடும் ஆற்றல் என் தாய் தந்தையர் பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே என் தாய் தந்தை இணைந்து வாழ வேண்டும்
6.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் மனமும் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று அவரவர்கள் இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
அதற்குப்பின் நம் மூதாதையர்களுக்கு நாம் உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சுதல் வேண்டும். ஏனென்றல் அவர்கள் குல வழியில் தான் நாம் உருவாகி இருக்கின்றோம். மனிதனாக உருவாகியதற்கு காரணமே அவர்கள் தான்.
வீட்டில் பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
1.எங்கள் அன்னை தந்தையையும் எங்களையும் காத்திட எத்தனையோ துன்பங்கள் பட்ட அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களிடமிருந்து நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் பாட்டன் பாட்டி வாழ வேண்டும்
3.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும்.
அவருடைய உணர்வுகள் குல வழியில் நமக்குள் இருக்கப்படும் பொழுது சந்தர்ப்பத்திலே உடலை விட்டு அவர்கள் பிரிய நேர்ந்தால்… அடுத்த கணமே எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தோமோ அதனின் வலுக் கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அந்த சூட்சும சரீரம் பெற்ற உயிரான்மாக்களை அங்கே அனுப்புதல் வேண்டும்.
நஞ்சு கலந்த உடலை குறுக்கச் செய்து வேதனை என்ற உணர்வுகள் கலந்து அந்த ஆன்மாக்கள் வெளியே சென்றால்… இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உணர்வுக்குத் தக்க உடலாக உருவாக்கிவிடும் உயிர்.
இதைப் போன்ற நிலையில் இருந்து அவர்களை மீட்டிட உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்தால்
1.உடல் பெறும் நஞ்சினைக் கரைத்து விடுகின்றது.
2.நம்மை வாழ வைத்த அந்த உயர்ந்த சக்திகள்… அந்த உயிர்கள் அங்கே நிலைத்திருக்கின்றது.
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கொண்டு அந்த ஆன்மாக்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அந்த உணர்வின் துணை கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விடுகின்றது. மூதாதையர்களை அங்கே சேர்த்தல் வேண்டும்.
அவர்கள் முன் சென்றால்… ஒளியின் சரீரமாக ஆன பிற்பாடு அவர் அருளை எளிதில் பெறலாம். நமக்குள் வரும் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெறுவது மிகவும் எளிது.
1.அகஸ்தியன் கண்ட அந்த உண்மையின் வழியிலே நாமும் சென்றோம் என்றால்
2.அந்த அருள் வழியைப் பெற்று பேரருளைப் பேரொளியாக மாற்றிவிடும். உடலில் இருக்கும் அனைத்து அணுக்களையும் பேரொளியாக மாற்றிவிடும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை அடைகின்றது. உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச்சரீரம் அடைகின்றது.
மனிதன் தான் இதை எல்லாம் செயல்படுத்த முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.