
அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி பேரொளியாக நாம் வாழ வேண்டும்
ஒரு வேதனைப்படும் மனிதனை உற்று நோக்கினால் அப்போது நமது எண்ணங்கள் பலவீனம் அடைந்து விடுகின்றது. அதை மாற்றி அமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் உடனடியாக எண்ணி எடுத்தல் வேண்டும்.
ஏனென்றால் துருவ நட்சத்திரம் தீமைகளைக் கருக்கியது… தீமையை வென்றது… நஞ்சினை வென்றது. ஆகவே அந்த உணர்வின் சக்தியை நாம் நுகர்ந்து வேதனையான உணர்வுகள் நமக்குள் செயலாகாதபடி அதைச் சேர்த்து வேதனையைக் குறைத்துப் பழகுதல் வேண்டும்.
வேதனைப்படுவோரைப் பார்த்தால்…
1.அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வேதனையிலிருந்து அவர் விடுபட வேண்டும்
3.அவர் உடல் நலம் பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்து அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.
இந்த உணர்வை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.
பின் நம் இரத்த நாளங்களில் கலந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுவாக மாறும் பொழுது
1.நாம் எத்தகைய நிலை பெற்றோமோ அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அது தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.
2.அப்பொழுது நம் உடலுக்குள் தீமை அகற்றிடும் அணுக்கள் பெருகுகின்றது
3.தீமையை மாற்றி அமைக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
நமது வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளோ அல்லது வேதனைப்படும் உணர்வுகளோ கோபமோ வெறுப்போ… சந்தர்ப்பத்தால் பயமோ ஆத்திரமா இத்தகைய உணர்வுகள் தோன்றும் போதெல்லாம்… அவைகள் நமக்குள் அணுக்களாக உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு அவைகளைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.
ஆனால் தீய உணர்வையே நுகர்ந்து தீய அணுக்களே நம் உடலுக்குள் பெருகி விட்டால் நம் உடல் சீர்குலைகின்றது… கடும் நோய் ஆகிறது.
ஆகவே அத்தகைய நோய்கள் வளராது தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அவ்வப்போது நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றுகின்றோமோ அதனால் நமக்குள் இந்த பூமியின் பற்று அற்றுப் போய் விடுகின்றது.
ஆனால் நோயின் தன்மையை அதிகமாக நேசிக்கும் போது புவியின் பற்றுக்கே வருகின்றோம். நோயினைப் பற்றி விட்டால் மனிதனல்லாத உருவையே பெறுகின்றோம்.
இதிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
ஆகவே துருவ தியானத்தில் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் பெற்றுத் தீமைகள் விளைந்திடாது தடுக்க வேண்டும்.
1.நாம் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று உணர்வினைக் கூட்டி வளர்த்தால் நமக்குள் தீங்கு விளையாது.
2.அருள் ஒளியினைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி வாழ வேண்டும்
3.பேரருள் என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் தீமைகளை அகற்றிடும் அணுக்களாக மாற்றி
4.பேரொளி என்ற நிலையை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.