பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் “இராமேஸ்வரத்தில்” காட்டப்பட்டுள்ளது

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாம் பெற வேண்டும்…!
1.அதைப் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் இராமேஸ்வரத்தில் பார்க்கலாம்… பார்த்து அந்தச் சக்திகளை எடுக்க முடியும்.
2.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை இல்லாதபடி ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.

27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர்நிலையானால் அதைத் தன் பாதரசத்தால் மாற்றி அந்த எதிர்நிலை வரும் பொழுது மோதி… வெப்பம் காந்தம் என்ற உணர்வாக்கி… பிரிந்து செல்லும் உணர்வை எது நுகர்கின்றதோ அதை “இயக்க அணுவாக மாற்றும் சக்தி பெறுகின்றது சூரியன்…”

ஆனால் அகஸ்தியனோ
1.இதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாற்றி
2.உயிரைப் போல உணர்வை ஒளியாக மாற்றி இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

சூரியனோ அழியும் தன்மை பெற்றது… இந்த உயிரோ அழிவதில்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகளும் உடலும் தான் கருகுகின்றது.

கருகிய உணர்வு இணைந்த பின் உயிருடன் இணைந்து செல்லப்படும் பொழுது வேதனை என்று உணர்வே வருகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் உடலிலே இல்லை என்றாலும்… வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டு நரக வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த உணர்ச்சியைத் தூண்டி வேதனைப்படுத்தும் அந்த வேதனை உணர்வைத்தான் அங்கே வளர்த்துக் கொண்டிருக்கும்.

இதை நாம் தெரிந்து கொள்ள… ஞானிகள் காட்டிய அருள் வழியில் இராமேஸ்வரம் என்று வரப்படும் பொழுது “நேரம் ஆகிவிட்டது…!” ஏனென்றால்
1.இந்த மனிதனுடைய வாழ்க்கையில் சிறிது காலமே வாழுகின்றோம்.
2.அந்த நேரத்திற்குள் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும் பகைமைகளை மறத்தல் வேண்டும்.

அதற்காக… “எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம்” என்ற இந்த உடலில் ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து… இருள் நீக்கி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும் திறனைப் பெற வேண்டும்.

நாம் வாழும் ஊரிலே விநாயகரைப் பார்த்தாலும்… அருகில் உள்ள மரங்கள் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாதபடி மறைத்து விடுகின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தை இராமேஸ்வரத்தில் மறைப்பில்லாதபடி நாம் காண முடிகின்றது.

பார்த்து அந்தச் சக்தியைப் பெறுவதற்காகக் கடலோரப் பகுதியாக இப்படித் தேர்ந்தெடுத்து அந்த நட்சத்திரத்தின் இயக்கங்களை காணுவதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடலும்
2.எண்ணத்தால் ஒளியின் உடல் பெற்ற நிலையும்
3.அந்த ஒளியின் உணர்வை நமக்குள் பெற்று
4.இருளை நீக்கி அருள் சக்தி பெறும் இடமாக அங்கே மாற்றினார்கள்.

அந்த இடத்திலே ஆலயத்தை அமைத்து குறுகிய காலமே மனிதன் வாழுகின்றான் என்ற நிலையைக் காட்டி எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் என்ற உணர்வைக் காட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்படி செய்தார்கள் ஞானிகள்.

சிறிது காலமே நாம் வாழுகின்றோம்… அதற்குள் மனிதனாகி நாம் வளர்ச்சி அடைந்து எதைப் பெற வேண்டும்…? என்பதற்காக இப்படிக் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் எண்ணப்படும் பொழுது இந்தக் குறுகிய காலத்திற்குள் நம் உடலுக்குள் பகைமைகளை நீக்கி மனதை ஒன்றாக்கும் நிலையை அது உருவாக்குகின்றது.

உடலுக்குள் பகைமைகள் அனைத்தையும் நீக்கி எல்லா மனங்களும் ஒன்றாக்கப்படும் போது…
1.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று…
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையும் தருணத்தைத் தான் இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply