நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.
1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply