
பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”
தீமை என்ற நிலையில் ஒருவன் பேசி விட்டால் அது வாலி என்ற நிலையை அடைகின்றது.
1.அந்தத் தீமையான சொல்லை ஒருவன் கேட்டால் அது அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
2.திருப்பி அவருடைய எண்ணங்களும் வாலியாகின்றது.
இத்தகைய போர் முறை வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்தும் அந்த நல்ல உணர்வுகள் மடிந்து விடுகின்றது.
அதனால் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று காவியத்திலே காட்டினார்கள்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இன்று உலகில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே வாழும் நாம் உடலின் இச்சைக்கு அடிமையானால்… கடும் நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.
உடலின் இச்சைக்கு வாழப்படும் பொழுது வேதனைப்படுத்தி மற்றொன்றைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து இந்த உடலில் வாழலாம்.
1.அடுத்த கணம் இந்த நஞ்சின் தன்மையை கொண்டு பிறருடன் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
2.அவன் இடும் சாப அலைகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்…!
இன்று இவர்கள் இவ்வாறு செய்யலாம் ஆனால் அவன் குடும்பத்தில் கருவில் விளையும் சிசுவிற்கு
1.சாபமிட்ட அலைகளைக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த தாய் நுகர நேர்ந்தால்
2.அந்தச் சிசுவிற்குள் இந்த உணர்வுகள் விளைந்து
3.இவனால் பட்ட வேதனைகள் அந்த ஒன்றுமறியாத குழந்தையும் நரக வேதனைப்படும் தன்மை வருகின்றது.
இவன் செல்வத்தைச் சம்பாதித்தாலும் அந்த குழந்தை அதை பெறுவதற்கு இல்லை. ஆனால் தட்டிப் பறித்துச் சென்றுவிடும் இவன் அதை அனுபவிக்கப் போவதில்லை.
குழந்தைக்காகத் தான் பணத்தைச் சேமிக்கிறேன் என்று சொன்னாலும்
1.அவனிட்ட சாப அலைகளால் இவனும் வாழ முடிவதில்லை
2.அவன் குழந்தையையும் வாழ முடியாத நிலைகள் செய்து விடுகின்றது.
இப்படி ஒவ்வொரு மனிதனும் ஆசையின் எல்லை கொண்டு தன் நிலைகளிலே விஷம் கொண்ட உணர்வுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று உள்ளது.
அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ… மதம் இனம் என்ற நிலைகளைத் தூண்டிவிட்டு அதிலே நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலையில் நஞ்சின் தன்மையாகப் பாயச் செய்து விட்டார்கள்.
வழி வழியாக வந்த நிலைகளில் இன்று எது உண்மை…? எது பொய்…? நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற சிந்தனையற்ற நிலையாக… சிதைந்த நிலையில் தான் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றால் அருள்
1.யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
2.அடிக்கடி அதை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.