சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும்

 

எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருபவர்கள் “சாமி… ஏதோ வரம் கொடுக்கின்றார்…” என்று அத்தகைய பழக்கத்தில் தான் வருகின்றார்கள். என் குடும்பத்தில் இப்படி நடந்து விட்டதே… எனக்குக் கஷ்டம் வந்து விட்டதே…! என்று வேதனையுடன் அழுகைக் குரலுடன் கஷ்டத்தைத் தான் சொல்கின்றார்கள்

1.யாம் சொல்வதை நிதானமாகக் கேட்டு…
2.கொடுக்கும் உபதேசத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பதிவாக்கும் நிலையில் இல்லை.

அந்த அளவிற்குச் சில பேர் வருகின்றார்கள்.

யாம் திரும்பச் சொன்னாலும் கூட இல்லைங்கே… என் கஷ்டம் அப்படியே இருக்கின்றது… அதனால் தான் சொல்கிறேன்…! என்று சொல்கின்றார்கள்.

கஷ்டத்துடன் வரப்படும் பொழுது… அதை நீக்கும் உபாயங்களை யாம் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பண்புகள் அங்கே வராது போய்விடுகின்றது.

இது போன்ற துன்ப நிலையிலிருந்து நீங்கள் விடுபடுதல் வேண்டும் என்பதற்காகத்தான் காலை துருவ தியானத்தைக் கொடுத்துள்ளோம். அதன் மூலம் அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெற்று யாம் பதிவு செய்ததை நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

அதே சமயத்தில் துருவ மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவனின் உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.இந்த இரண்டையும் எண்ணி இந்த உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதற்குப் பின் எந்த நல்ல காரியமோ அது நடைபெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்த உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டு அந்தக் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லுங்கள்… அது செயல்படும்…!

காரணம் இயற்கையின் பல பேருண்மைகளையும் கால்நடையாக அலைந்து திரிந்து… மனித உடலின் செயலாக்கங்களை எல்லாம் உணர்ந்து அந்த மகரிஷிகள் சக்தி நீங்கள் பெற முடியும் என்று உங்களை நம்பச் செய்கின்றோம். ஆனால் நீங்கள் உங்களை நம்ப மறுக்கிறீர்கள்… இன்னும் நம்பாது தான் இருக்கின்றீர்கள்.

அதே சமயத்தில்… அது வரும் சொத்து வரும் செல்வம் வரும் இப்படிச் செய்தால் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று பணத்தை மட்டும் அடுத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு அவன் சொல்லைக் கேட்டு அதன் வழி தான் நடக்க முற்படுகின்றனர்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு
1.இங்கே கொடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக எடுத்துப் பாருங்கள்
2.கடும் தீமைகளையும் உங்களால் அகற்ற முடியும்
3.அருள் ஒளியை உங்களுக்குள் வளர்க்க முடியும் அறியாது வரும் இருளையும் போக்க முடியும்
4.உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையிலும் இருள்கள் போகும் அதைப் போக்க முடியும்
5.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாற வேண்டும்… துருவனாக மாற வேண்டும்…
6.துருவ நட்சத்திரமாக அந்த ஒளியின் சுடராக அந்த உணர்வின் ஒளி அலைகள் பாய வேண்டும்.

என்றும் பிறவியில்லா நிலை அடைந்த அந்த சப்தரிஷிகளின் உணர்வை வளர்த்து
1.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வாக… நாம் அதுவாக ஆகவேண்டும் என்ற நிலையில்
2.அந்த எல்லையை அடைவதற்கு ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்துங்கள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply