எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

 

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இது எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு அடுத்து… அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் “சரி பாதி” இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இதே சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

Leave a Reply