நம்மை அறியாமல் தான் கெட்டது வருகிறது… அதே போல் நன்மையைக் கொண்டு வந்து அதை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்

நம்மை அறியாமல் தான் கெட்டது வருகிறது… அதே போல் நன்மையைக் கொண்டு வந்து அதை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்

 

நண்பருக்குள் ஒருவருக்கொருவர் பகைமையாகித் “துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணினால் புரையோடுகிறது. நண்பருக்குள் “உதவி செய்தார்…” என்று ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக எண்ணினால் விக்கலாகிறது.

பற்று பாசத்துடன் நம் குழந்தையை வளர்க்கின்றோம். இருந்தாலும் அந்தப் பாச உணர்வுகளினாலும் சில தீமைகள் சந்தர்ப்பத்தில் வந்து சேர்கிறது.

இன்னொரு நண்பரிடம் பழகுகின்றோம். அவருடைய குழந்தைக்கு எதிர்பார்க்காதபடி… “விபத்தானது…” என்று கேள்விப்படுகின்றோம்.. என்ன… ஏது…? என்று விசாரிக்கின்றோம்.

அவர் அதைச் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே நினைவு கொண்டு வெளி ஊரில் இருக்கும் நம் குழந்தையை எண்ணத் தொடங்குகிறோம்.
1.நண்பர் வாயிலாகக் கேட்ட இதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
2.தன் குழந்தையின் மீது உள்ள பாசத்தால் அங்கே நடந்த அதே வேதனையான எண்ணங்கள் வந்தால்
3.இந்த உணர்வு அங்கே நம் குழந்தையை இயக்கி
4.இயந்திரத்திலேயோ வாகனத்திலேயோ அவன் செயல்படும் போது அவன் சிந்தனையைக் குறையச் செய்து
5.எதிர்பாராதபடி விபத்துக்களில் சிக்க வைத்துவிடும்… நடந்து சென்றால் கூட பள்ளம் மேடு தெரியாதபடி கீழே விழுகச் செய்யும்.

ஐயோ… நான் நினைத்தேனே இப்படி நடந்துவிட்டதே…! என்று நாம் சொல்லத் தொடங்குவோம். காரணம்…
1.மற்றோர் சொல்லும் உணர்வைக் கேட்கப்படும் போது
2.ஒருவருக்கொருவர் தொடர் கொண்ட நிலையில் இப்படி எல்லாம் இயக்கிவிடுகின்றது.

ஆகவே நட்பின் தன்மை வரும் போது
1.நல்லதைப் பிரித்திடும் நிலைகளை… அந்தத் தீமையை மாற்றி
2.தீமைகளைப் பிரித்து நல்லதைச் சேர்த்திடும் தன்மை நமக்குள் வர வேண்டும்.

அத்தகைய அருள் ஞான சக்தி பெறுவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் மெய் ஞானிகள் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கிறேன். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த ஞானிகளின் உணர்வலைகளை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றேன் (ஞானகுரு).

அதை நீங்கள் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு
1.நீங்களே தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகளைப் பெற முடியும்.
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கி அந்த ஆற்றலாகப் பெறச் செய்யும்.

அதே போன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பகைமை இருந்தால் உங்கள் நினைவாற்றல் கொண்டு கணவனைத் தன்னுடன் இணையச் செய்ய முடியும். பகைமை கொண்ட உணர்வுகள் அவரை ஆட்டிப் படைக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட முடியும்.

மெய் உணர்வின் வலிமை கொண்டால் அறியாத இருள் சூழந்த நிலைகளை அகற்றுகிறது. அருள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க சிந்திக்கும் செயலும் வருகின்றது… இணைந்து வாழும் நிலைகள் வருகின்றது.

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகள்.

இன்னொன்று… தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது பிறர் துன்பப்படுவதையோ அல்லது விபத்தான உணர்வுகளையோ தாய் உற்றுக் கேட்டு… பாசத்தின் உணர்வு கொண்டு எண்ணி… அதனைத் தனக்குள் பதிவாக்கியிருந்தால்… இந்த உணர்வுகள் தாய் கருவிலேயே குழந்தைக்குள் உருவாகிவிடுகின்றது.

குழந்தை பிறந்து வளர்ந்த பின்..
1.இந்தப் பூர்வ புண்ணியத்தின் நிலைகள் கொண்டு
2.அதே பருவம் வரப்படும் போது விபத்தோ அல்லது நோயோ
3.தாய் எதைப் பதிவாக்கியதோ அந்த நிலை செயலாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிட வேண்டும் என்றால் அது பூர்வ புண்ணியமாக இருந்தாலும் அந்த உணர்ச்சிகள் இயக்குவதை மெய் ஞானிகள் காட்டிய வழிகளில் செயல்படுத்தி அந்தக் குழந்தையை அருள் ஞானத்தின் வழியில் மாற்றிக் கொண்டு வர முடியும்.

Leave a Reply